அலுவலக டென்ஷன் கொழுப்பை அதிகரித்து.............


நாம் பணியாற்றும் இடத்தில் அளவுக்கு அதிகமான மன அழுத்தம், டென்ஷன் தொடர்ந்து நீடித்தால் உடலில் கொலஸ்டிரால் அளவு தாறுமாறாக உயர்ந்து இதய நோய்கள் ஏற்படுவதோடு மரணம் கூட ஏற்படலாம் என்று எச்சரிக்கிறது சமீபத்திய ஆராய்ச்சி.
பொதுவாக மனஅழுத்தம், அடிக்கடி டென்ஷனாவது போன்றவற்றால் நமது அன்றாட செயல்பாடுகள் பாதிக்கப்படும். ஆரோக்கியமான உணவு அளவு, உடற்பயிற்சிகள் குறையும். புகை பிடிப்பது, மது அருந்துவது ஆகியவை அதிகரிக்கும். இதன் காரணமாக இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று இதற்கு முன்னரே பல்வேறு ஆராய்ச்சிகள் கூறியுள்ளன. இந்நிலையில், மன அழுத்தத்துக்கும் உடலின் கொழுப்பு அளவுக்கும் அதன் விளைவாக வரும் இதய நோய்களுக்கும் நேரடி தொடர்பு இருப்பதை நிரூபித்திருக்கிறது லேட்டஸ்ட் ஆய்வு.
ஸ்பெயினின் மலாகா நகரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையும் சான்டியாகோ கம்போஸ்டெலா பல்கலையும் இணைந்து சமீபத்தில் இது குறித்து ஒரு ஆய்வு நடத்தின.அதில் பல்வேறு விதமான அலுவலகங்களில் பணிபுரியும் 90 ஆயிரம் ஊழியர்களை கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.
கடந்த ஓராண்டில் அலுவலக சூழ்நிலையால் மனஅழுத்தத்துடன் பணியாற்றியதாகவும் அன்றாடம் அலுவலகம் போய் வருவதே மிகப்பெரும் மனச்சுமையை ஏற்படுத்தியதாகவும் அவர்களில் சுமார் 7,800 பேர் கூறினர். அவர்களது ரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்டிரால் அளவு உள்ளிட்டவையும் அளவீடு செய்யப்பட்டன.
இந்த ஆய்வின் முடிவில் தெரிய வந்த தகவல்கள் பற்றி தொழில்சார் மனஅழுத்தங்கள் ஆராய்ச்சியாளரும் பிரபல மனநல மருத்துவருமான கார்லஸ் கேடலினா,”ஒரு நாளில் கணிசமான அளவு நேரம் அலுவலகத்தில் நாம் இருக்க வேண்டியுள்ளது. அங்கு மனஉளைச்சல், மன அழுத்தம், டென்ஷனுடன் வேலை பார்ப்பது மனதளவில் மட்டுமல்லாமல், உடலில் கொழுப்பு அமிலங்களின் வளர்சிதை மாற்றங்களையும் பாதிக்கிறது. அலுவலகத்தில் தொடர்ந்து ஸ்டிரெஸ்சுடன் பணியாற்றுபவர்களது ரத்தத்தில் கொலஸ்டிரால், லிப்போ புரோட்டீன் அளவுகள் தாறுமாறாகின்றன.
எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்டிரால் மற்றும் டிரைகிளிசரைடு அளவு அதிகரிக்கிறது. இதன் விளைவாக எச்டிஎல் எனப்படும் நல்ல கொலஸ்டிரால் அளவு குறைகிறது. இந்த பாதிப்பு டிஸ்லிப்பிடெமியா எனப்படுகிறது. உடலில் கொலஸ்டிரால் அளவு அதிகமானால், அதை தானாகவே சரிசெய்யக்கூடிய மெக்கானிசம் இயற்கையாகவே நம் உடலில் உள்ளது. அதையும் மீறிப்போகிற பட்சத்தில்தான் பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆனால், தொடர்ந்து மனஅழுத்தம் அதிகரித்தால் இந்த மெக்கானிசம் பாதிக்கப்படுகிறது.
அது மட்டுமின்றி, அதிக டென்ஷன், மனஅழுத்தம் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரிப்பது, ரத்தத்தின் வெப்பநிலை அதிகரிப்பது போன்ற காரணங்களாலும் கொலஸ்டிரால் அளவு அதிகரிக்கிறது. மேலும், கொழுப்பு அமிலங்கள் உற்பத்தியையும் ஸ்டிரெஸ் அதிகரிக்கிறது. மனஅழுத்தம் காரணமாக உடலில் கொலஸ்டிரால், டிரைகிளிசரைடு, லிப்போ புரோட்டீன் அளவு கணிசமாக அதிகரித்தால் ரத்தக் குழாய்களில் கொழுப்பு திரட்சி அதிகமாகி, நாளடைவில் அது இறுகிப் போய் இதயம் சம்பந்தமான நோய்கள் உருவாகிறது. இந்த பாதிப்புகள் ஒருகட்டத்தில் மரணத்தை கூட ஏற்படுத்தலாம்.”என்று கார்லஸ் கேடலினா கூறினார்.மேலும் இந்த ஆய்வு முடிவுகள் ஸ்பெயினின் ஸ்காண்டிநேவியன் மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது.
நன்றி
ஆந்தையார்

No comments:

Post a Comment