Showing posts with label Terrorism. Show all posts
Showing posts with label Terrorism. Show all posts

”மதுரை போலீஸ் மாடசாமி எப்படி இல்லாத தீவிரவாதத்தை இருப்பதாகக் காட்டுகிறார்?”: நெல்பேட்டை அம்பலங்கள்

(ஆகஸ்ட் 13, 2016இல் வெளியான செய்தி மீள்பிரசுரமாகிறது.)
Thanks: ippodhu.com


”தமிழ்வீரன் எனும் ஒரு இந்துமுன்னணித் தலைவரைக் கொலை செய்ய முயன்றேன் என ஒரு வழக்குத் தொடர்ந்து குண்டர் சட்டமும் போட்டார்கள். அந்தத் தமிழ்வீரனே அது பொய் வழக்கு என நீதிமன்றத்தில் வாதாடி எனக்கு விடுதலை வாங்கித் தந்தார்,” என்று தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட வழக்குரைஞர் முகமது அலி ஜின்னா மனித உரிமை ஆர்வலர்களிடம் கூறியுள்ளார். இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்ற சம்பவம். மதுரை நெல்பேட்டையிலுள்ள ஏழை, எளிய முஸ்லிம்களின் பெயரில் வழக்குகள் போட்டு மதுரை காவல் துறையின் ஒரு பிரிவினர் எப்படி இல்லாத தீவிரவாதத்தை இருப்பதாகக் காட்டுகிறார்கள் என்பதை ஆதாரங்களுடன் விவரிக்கிறது தேசிய மனித உரிமைக் கூட்டமைப்பின் தலைவர் அ.மார்க்ஸ் பங்குபெற்ற இந்த உண்மை அறியும் குழுவின் அறிக்கை:
உண்மை அறியும் குழுவின் அறிக்கையின் முழு விவரம்
“தீவிரவாதிகளின் ‘ஹிட்லிஸ்டில்’ மதுரை முக்கிய இடத்தில் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துக் கொண்டே இருக்கிறது” என்பது அக்டோபர் 22, 2013 அன்றைய தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளி வந்துள்ள செய்தி. இப்படித் தமிழகத்திலேயே மதுரை முஸ்லிம் தீவிரவாதத்தின் மையமாக உள்ளது என்றொரு கருத்தைப் பொதுப் புத்தியில் பதிப்பதில் தமிழக் காவல்துறை வெற்றி பெற்றுள்ளது. 2011 லிருந்து இன்று (2016) வரை மதுரை மாவட்டம் மற்றும் சுற்று வட்டாரங்களில் மட்டும் காவல்துறையினர் 17 வெடிகுண்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். அனைத்தும் டாஸ்மாக் கடைகள் பேருந்துகள், பொதுக்கூட்ட மேடைகள் முதலான மக்கள் கூடும் இடங்களில் வைக்கப்பட்டு வெடித்த மட்டும் வெடிக்காத குண்டுகள். இவற்றில் இரண்டு பார்சல் குண்டுகள்.
இப்படியான வெடிகுண்டுத் தாக்குதல்கள் உள்ளிட்ட பயங்கரவாத நடவடிக்கைகளால் அப்பாவிப் பொதுமக்கள் பெரிய அளவில் கொல்லப்படுவது என்பது உலகையே அச்சத்தில் உறைய வைத்துள்ள நேரத்தில் இப்படி மதுரை மாவட்டப் போலீஸ் 17 வெடிகுண்டு வழக்குகளைப் புலன் விசாரித்து வருவது என்பது இங்கு பொது மக்கள் மத்தியில் பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னொரு பக்கம் இந்த தீவிரவாதத் தாக்குதல் முயற்சிகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் செய்யப்படுவதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் பெரிய அளவில் அந்தச் சமூகத்தையே “சந்தேகத்திற்குரிய சமூகமாகவும்”, “பயங்கரவாதச் சமூகமாகவும்” பார்க்கக் கூடிய நிலைக்கும் இட்டுச் செல்கிறது.
எப்படி இருந்த போதிலும் இப்படியான பயங்கரவாதத் தாக்குதல்கள் கவனமாகப் புலன் விசாரித்துக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் பிரச்சினை என்னவெனில் ஆண்டுகள் ஐந்தாகியும் பெரிய அளவில் யாரும் இதில் கைது செய்ய்ப்படவில்லை. கைது செய்யப்பட்ட சுமார் பத்து பேர்களில் ஒன்பது பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மற்றவரும் இரண்டொரு நாளில் பிணையில் வெளிவருவார் எனச் சொல்லப்படுகிறது. தவிரவும் பயங்கரமான குண்டு வெடிப்பு நிகழ்ச்சிகளாக இவை காவல்துறையாலும் ஊடகங்களாலும் பிரமாதப் படுத்தப்பட்டாலும் இந்தப் 17 பயங்கரவாததாக்குதல் முயற்சிகளிலும் யாரும் ஒரு சிறிய அளவில் கூட பாதிக்கப்படவில்லை; சொத்திழப்புகளும் இல்லை.
இந்த வழக்கு விசாரணைகளில் குறைந்த பட்சம் மூன்று புலன் விசாரணை அமைப்புகள் ஈடுபடுத்தப்பட்டபோதும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் ஏன் இந்த மெத்தனம்? குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் தறுவாயில் இதை முறியடிக்கும் நோக்கில் ஆய்வாளர் மாடசாமி எனும் புலன் விசாரணை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என ஒரு குற்றச்சாட்டை மதுரை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் வைத்துள்ள ஒரு செய்தியும் பத்திரிகைகளில் பெரிதாய் வந்தது. வேறொரு புலன் விசாரணைக் குழுவில் உள்ள ஒருதலைமைக் காவலர் தீவிரவாதி ஒருவருடன் தொடர்பில் உள்ளார் எனவும் அவரிடமிருந்து பணம் பெற்றுள்ளார் எனவும் ஆதாரத்துடன் அதே கண்காணிப்பாளர் முன்வைத்துள்ள இன்னொரு புகார் பற்றிய செய்தியும் பத்திரிகைகளில் வந்தது. இது குறித்தெல்லாம் காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனத் தெரியவில்லை. ஆனால் வெடிகுண்டுகள் “வைக்கப்படுவதும்”, முஸ்லிம்கள் வழக்குகளில் சிக்க வைக்கப்படுவதும் தொடர்கின்றன. இது தொடர்பான வழக்கு விவரங்களை எல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது எங்களுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.
பல்வேறு புலன் விசாரணை முகமைகள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் இடையில் மிகப் பெரிய வேறுபாடுகள் உள்ளன. ஒரே குற்றம் குறித்து இரண்டு முகமைகளும் வெவ்வேறு நபட்கள் மீது குற்றச்சாட்டுகளை வைக்கின்றன. இதெல்லாம் காவல்துறையினருக்கு இடையே யார் விரைவாகப் பதவி உயர்வு பெறுவது, பணப் பரிசுகளைப் பெறுவது என நடக்கும் போட்டி என நாம் வாளாவிருந்துவிட முடியாது. ஏனெனில் இந்தப் போட்டிகளுக்கிடையில் பல அப்பாவிகள் பாதிக்கப் படுகின்றனர். ஒரு சமூகத்தையே பயங்கரவாதிகளாக மற்றவர்கள் பார்க்கும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலை சமூக ஒற்றுமைக்கும் அடிப்படை நீதிவழங்கு நெறிமுறைகளுக்கும் எதிரானது என்கிற வகையில் இது குறித்து ஆய்வு செய்து உண்மைகளையும், ஐயங்களையும் பொது வெளியில் வைப்பதற்கென கீழ்க்கண்ட சமூக ஆர்வலர்கள் அடங்கிய ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.
உறுப்பினர்கள்
1. பேரா.அ.மார்க்ஸ், தலைவர், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), சென்னை, 2. ரஜினி, மூத்த வழக்குரைஞர், உயர்நீதிமன்றக் கிளை, மதுரை, 3. வழக்குரைஞர் என்.எம்.ஷாஜஹான், மாநிலச் செயலர், NCHRO, மதுரை, 4. வழக்குரைஞர், ஏ.ராஜா, உயர்நீதிமன்றக் கிளை, மதுரை, 5. வழக்குரைஞர் எம். முஹம்மது அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர், NCHRO, சென்னை 6. வழக்குரைஞர் எஸ்.ஏ.எஸ்.அல்லாவுதீன்,உயர்நீதிமன்றக் கிளை, மதுரை,
இக்குழுவினர் இந்தப் 17 வெடிகுண்டு வழக்கு விவரங்களையும் முழுமையாக ஆராய்ந்தபின் சென்ற ஆக 5, 2016 அன்று மதுரை நகர காவல்துறை ஆணையர் ஷைலேஷ் குமார் யாதவ் ஐ.பி.எஸ், உளவுத்துறை உதவி ஆணையர் முத்து சங்கரலிங்கம், ஏ.டி.எஸ்.பி மாரிராஜன் ஆகிய காவல்துறை அதிகாரிகளையும் குற்ற வழக்குகளில் தொடர்பு படுத்தப்பட்டுள்ள மதுரை புதுராமநாதபுரம் சாலை முகமது முபாரக் எனப்படும் உமர் ஃபாரூக்(35) த/பெ மீரான் கனி, தற்போது கைது செய்யப்படுச் சிறையில் இருக்கும் நெல்பேட்டையில் செல்போன் கடை உரிமையாளர் அபூபக்கர் சித்திக்கின் தாய் ஜரீனா பேகம் க/பெ பீர் முகம்மது, நெல்பேட்டை பாண்டலி எனப்படும் முகமது அலி (39) த.பெ முகமது சுல்தான், நெல்பேட்டையில் பீடா கடை வைத்துள்ள சகோதரர்கள் ஃபரீத்கான் மற்றும் மன்சூர் கான் த/பெ அப்துல் ரீதிஃப் கான், நெல்பேட்டை வழக்குரைஞர் உ.முகமது அலி ஜின்னா த.பெ உமர் பாய், நெல்பேட்டை வழக்குரைஞர் சௌகத் அலி, காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனின் புகார்க்கடிதம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ரிட் மனு தாக்கல் செய்துள்ள வழக்குரைஞரும் SDPI கட்சியின் மதுரை மாவட்ட வழக்குரைஞர் அணித் தலைவருமான சையது அப்துல் காதர் த.பெ அப்துல் ரஷீது ஆகியோரையும் சந்தித்து விரிவாகப் பேசினர். மீண்டும் இவர்களில் சிலரைப் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் ஐயங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டனர். மேலூரில் பள்ளிவாசல் முன்பு வாசனைத் திரவியங்கள் விற்கும் அப்பாஸ் மைதீன் த/பெ ஷேக்தாவூத், மேலூரில் தற்போது ஒரு வெல்டிங் பட்டறையில் வேலை செய்துவரும் முபாரக் த.பெ ஷேக் என்கிற மீரா மைதீன், ஆட்டோ ஓட்டுநர் யாசின் த.பெ காதர் மைதீன் மற்றும் பிரியாணி மைதீன் த.பெ பக்ருதீன் ஆகியோரை நேரில் சந்திக்காவிட்டாலும் தொலை பேசியில் அவர்களுடன் விரிவாகப் பேச முடிந்தது. இந்த வழக்குகள் சிலவற்றை தற்போது விசாரித்து வரும் ஆய்வாளர் சீனிவாசன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம்.
17 வெடிகுண்டு வழக்குகளின் சுருக்கமான விவரங்கள்
1. 30.04.11 – மதுரை மாட்டுத்தாவணி அருகில் ‘டாஸ்மாக்’ பாரில் குண்டு வெடிப்பு (கே.புதூர் காவல்நிலையக் குற்ற எண் 788/2011). பள்ளிவாசலுக்கு அருகில் டாஸ்மாக் இருந்ததால் குண்டு வைக்கப்பட்டது எனச் சொல்லப்பட்டது.
2. 30.09.2011 – கே.புதூர் பஸ் டெப்போவில் நின்றிருந்த அரசு பேருந்தில் வெடிக்காத குண்டு ஒன்று காணப்பட்டது (கே.புதூர் கா.நி.கு.எண் 1302/2011).
3. 07-12,2011 – திருவாதவூர் அருகே சித்தரடிகள் குளத்தில் குண்டு வெடிப்பு (மே.லூர் கா.நி.கு.எண் 757/2011) – பாபர் மசூதி தகர்ப்புக்கு எதிர்வினை எனக் காரணம் சொல்லப்பட்டது).
4. 01.05.2012 – மதுரை அண்ணா நகர் ஶ்ரீராமர் கோவில் கம்பி கேட் அருகில் சைகிள் குண்டு வெடிப்பு. (அண்ணா நகர் கா.நி.கு.எண் 404/2012) –பா.ஜ.க வின் தாமரை சங்கமம் நிகழ்ச்சிக்கு அத்வானி வருகையை எதிர்த்து எனச் சொல்லப்பட்டது).
5. 03.08.2012 – உமர் ஃபாரூக் என்பவர் கடைக்கு ஒரு பார்சல் குண்டு வந்தது (தெற்குவாசல் கா.நி.கு.எண் 736/2012) –சௌராஷ்டிர மாநாட்டுக்கு மோடி வருவதாகக் கேள்விப்பட்டு வைத்ததாகச் சொல்லப்பட்டது). இருவர் கைது.
6. 29.09.2012 – தேனி டாஸ்மாக் கடை அருகில் ஒரு வெடிகுண்டு (தேனி கா.நி.கு.எண் 692/2012) – இமாம்அலி நினைவாக எனச் சொல்லப்பட்டது.
7. 01.11.2012 – திருப்பரங்குன்றம் தர்ஹா அருகில் ஒரு வெடிக்காத குண்டு (திருப்பரங்குன்றம் கா.நி.கு.எண் 362/2012)
8. 20.11.2013 வழக்குரைஞர் அக்பர் அலி காரில் குண்டு வெடிப்பு (விளக்குத்தூண் கா.நி.கு.எண் 120/2014).
9. 09.02.2014 – தினமணி தியேட்டர் அருகில் அ.தி.மு.க சாதனை விளக்கப் பொதுக்கூட்ட மேடை பின்புறம் குண்டு வெடிப்பு (தெப்பக்குளம் கா.நி.கு.எண் 88/2014).
10. 05.02.2014 – ராஜலிங்கம் வெங்காயக் கடை அருகில் ஒரு குண்டு கண்டெடுப்பு (விளக்குத்தூண் கா.நி.கு.எண் 120/2014)
11. 14.03.2014 – நெல்பேட்டை ஜமாத் செயலர் காஜா மைதீன் பைக்கில் குண்டு வெடிப்பு (விளக்குத்தூண் கா.நி.கு.எண் 196/2014).
12. 02.01.2015 – சிவகங்கை டாஸ்மார்க் பாரில் குண்டு வெடிப்பு (சிவகங்கை கா.நி.கு.எண் 02/2016) – பள்ளிவாசலுக்கு அருகில் டாஸ்மாக் இருந்ததால் எனச் சொல்லப்பட்டது.
13. 01.03.2015 – வில்லாபுரம் சம்சுதீன் என்பவரது வீட்டில் கத்தி மற்றும் குண்டு செய்வதற்குத் தேவையான பொருட்கள் சோதனையில் கண்டெடுக்கப் பட்டது (அவனியாபுரம் கா.நி.கு.எண் 262/2015 u/s 25(1)(a) of arms act r/w 201, 153 (A), 187, 120(B), 341 IPC).
14. 21.03.2015 – சிவகங்கை மாவட்டம் பிரான்மலையில் குண்டு வைக்க மூலப் பொருட்கள் வைத்திருந்ததாக Q பிரிவு போலீஸ் வழக்கு குற்ற எண் 01/2015. 11 பேர் குற்றம்சாட்டப்பட்டனர். மூன்று வழக்குரைஞர்கள் உட்பட. இமாம் அலியைக் காட்டிக் கொடுத்தவர்களைப் பழிவாங்க உருவாக்கப்பட்ட ‘அல் முத்தஹீம் ஃபோர்ஸ்’ அமைப்பினர் செய்தது எனக் குற்றச்சாட்டு.
15. 29.09.2015 – ஆரப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இரண்டு பஸ்களில் குண்டு வெடிப்பு (கரிமேடு கா.நி.கு.எண் 859/2015). ஏழுபேர் குற்றம்சாட்டப்பட்டு ஐவர் பிணையில் உள்ளனர் இருவர் தலைமறைவு.
16. நெல்பேட்டை கல்பாலம் குண்டு வெடிப்பு – (விளக்குத்தூண் கா.நி.கு.எண் 769/21016).
17. .நெல்பேட்டை அம்சவல்லி ஓட்டல் அருகில் ஃபரீத்கான் என்பவர் பீடா கடையில் பார்சல் குண்டு (விளக்குத்தூண் கா.நி.கு.எண் 900/2016).
மேலே உள்ள குண்டு வெடிப்பு வழக்குகள் எதிலும் யாரும் பாதிக்கப்படவில்லை. இந்த ‘வெடிகுண்டுகள்’ யாவும் பட்டாசுவகைக் குண்டுகள் எனவும் low intensity explosion எனவும் தான் காவல்துறையினரால் குறிப்பிடப்படுகிறது. இந்த வழக்குகள் பலவற்றின் குற்றப்புலனாய்வு அதிகாரியான ஏ.டி.எஸ்.பி மாரிராஜன் எங்களிடம் இக்குண்டுகள் பற்றிச் சொன்னது: “இந்த explosives எல்லாம் சும்மா சின்ன பட்டாசு வெடிங்கதான். உங்க பக்கத்தில இதை வச்சு வெடிச்சா பக்கத்துல இருக்கிற பேப்பர், துணி இதுதான் லேசா நெருப்பு பத்தி அணையும். வேற எந்த ஆபத்தும் இருக்காது. இந்தக் குண்டுகள் ஒவ்வொண்ணுக்கும் ஆகிற மொத்தத் தயாரிப்புச் செலவே ஒரு 150 ரூபாய்தான் இருக்கும்” பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் மதுரை காவல்துறை ஆணையரும் இவை சாதாரண பட்டாசுக் குண்டுகள்தான் என ஏற்றுக் கொண்டார். இந்த 17 வழக்குகளில் இதுவரை திருவாதவூர் பஸ் குண்டு கண்டெடுக்கப்பட்ட வழக்கு, அ.தி.மு.க பிரச்சாரக் கூட்ட மேடைக்குப் பின் குண்டு வெடித்த வழக்கு, கவுன்சிலார் ராஜலிங்கம் அலுவலகம் அருகில் குண்டு கண்டெடுக்கப்பட்ட வழக்கு, பிரான் மலை குண்டு தயாரிப்பு மூலப் பொருட்கள் வைக்கப்படிருந்தது என்கிற வழக்கு ஆகிய நான்கில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2011 முதல் 2014 வரையுள்ள அனைத்து வழக்குகள் மற்றும் கல்பாலம் வழக்கு ஆகியவற்றை சி.பி.சி.ஐ.டி காவல் பிரிவின் சிறப்புப் புலனாய்வுத் துறை (SIT) விசாரித்து வருகிறது. ஆரப்பாளையம் பஸ் குண்டு வழக்கு, சமீபத்திய நெல்பேட்டை பீடா கடை பார்சல் குண்டு வழக்கு ஆகிய இரண்டும் நகர காவல்துறையால் புலன் விசாரிக்கப்படுகிறது.
இந்தப் 17 வழக்குகளில் முதல் வழக்கு பதிவாகி ஐந்தாண்டுகள் ஓடிவிட்டன. நம் தமிழகக் காவல்துறை தன்னை ஸ்காட்லன்ட் யார்டுடன் ஒப்பிட்டுக் கொள்ளத் தயங்குவதில்லை. சுவாதி வழக்கில் ஒரு வார காலத்தில் குற்றவாளியைக் கண்டு பிடித்த பெருமையும் அதற்குண்டு. ஆனால் இந்த ஐந்து ஆண்டுகளில் இந்த 17 வழக்குகளில் நான்கில் மட்டுந்தான் அதனால் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய முடிந்துள்ளது. நாட்டையே அச்சுறுத்தும் பயங்கரவாதம் தொடர்பான இவ்வழக்குகளில் இத்தனை மெத்தனம் ஏன்? இத்தனை வழக்குகளிலும் சுமார் 22 பேர்கள்தான் இதுவரை குற்றம் சாட்டப்பட்டு, அதிலும் 10 பேர்கள்தான் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிலும் 9 பேர் இன்று பிணையில் வெளி வந்துள்ளனர். தமிழகக் காவல்துறையினர் வெடிகுண்டு வழக்குகளிலும் கூட இத்தனை இரக்கத்துடன் செயல்படக்கூடியவர்களாக இருக்கிறார்களே என வியப்பதா? இல்லை இவ்வளவுதான் இவர்களின் திறமை என நகைப்பதா? இல்லை இதற்கெல்லாம் பின் ஏதோ கரணங்கள் உள்ளன என சந்தேகப்படுவதா? இதற்கு விடை காண இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்ட முறைகளையும் அதனூடாக இன்று மேலெழுந்துள்ள சில பிரச்சினைகளையும் ஆராய வேண்டும்..
காவல்துறை மீது காவல்துறையே வைக்கும் குற்றச்சாட்டு
வெடித்ததெல்லாம் பட்டாசுக் குண்டுகள்தான் என்ற போதிலும் பெரும்பாலான முதல் தகவல் அறிக்கைகளில் குற்றவாளிகள் யார் எனப் பெயரிடப்படாத போதும், இந்த வழக்கு விசாரணைகளில் மதுரை முஸ்லிம்கள், குறிப்பாக நெல்பேட்டை வாழ் ஏழை எளிய முஸ்லிம் இளைஞர்கள் மிகக் கொடுமையாகத் துன்புறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டனர். ஏ.டி.எஸ்.பி மயில்வாகனன் மற்றும் ஆய்வாளர் மாடசாமி ஆகியோர் தலைமையில் உருவாக்கப்பட்ட தனிப்படை ( Special Team) சுமார் 500 முஸ்லிம் இளைஞர்களைக் கடும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தி விசாரித்தது. நெல்பேட்டை வாழ் பெண்களும் கூட பெண் போலீஸ் அதிகாரிகள் முன்னிலை இல்லாமல் விசாரிக்கப்பட்டனர். சுமார் ஓராண்டுக்கு முன் நெல்பேட்டை மக்கள் மத்தியில் இது தொடர்பாக விசாரித்த எங்கள் குழு முன் இப்படிப் பலரும் வந்து தாங்கள் அப்பாவிகள் எனவும், தங்களைத் துன்புறுத்துவதாகவும் பதிவு செய்தனர். இவர்களின் விசாரணை முறை எத்தனை அநீதியானது, இவர்களது விசாரணையில் எப்படி முஸ்லிம் வெறுப்பு அடிநாதமாக உள்ளது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டைச் சொல்லலாம்.
2011ல் இந்த மயில்வாகனன் – மாடசாமி ‘டீம்’ பரமக்குடி பா.ஜ.க பிரமுகர் முருகன் என்பவர் கொலையைப் புலனாய்வு செய்தது. பரமக்குடி – இடைக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த மதார் சிக்கந்தர் என்பவர் திருச்சி சிறையில் காவலராக இருந்தார். இவரையும் இந்தப் பகுதியைச் சேர்ந்த இத்ரிஸ் என்பவரையும் இந்தக் கொலை வழக்கில் தொடர்பு படுத்த மாடசாமி குழு முடிவெடுத்துக் களத்தில் இறங்கியது. இவர்கள் மதாரையும் இத்ரிசையும் கடத்திச் சென்று திருச்சியில் ஒரு விடுதியில் தங்க வைத்துச் சித்திரவதை செய்தனர். இதே நேரத்தில் இந்த ஊரைச் சேர்ந்த சுந்தரவேலு, பாண்டி என்னும் இரு இளைஞர்கள் வேறொரு வழக்கில் பிணை கிடைத்து திருச்சி நீதிமன்றத்தில் கையெழுத்திட ஆணையிடப்பட்டனர். கையெழுத்திடவந்த இந்த இளைஞர்கள் இருவரையும் மாட்சாமி டீம் கடத்திச் சென்று அவர்களை என்கவுன்டர் செய்வதாக மிரட்டியது. இறுதியில் அந்த மிரட்டலுக்கான காரணத்டை வெளிப்படுத்தினர். அவர்கள் இருவரும் கையெழுத்துப் போடுவதற்காக திருச்சியில் இருந்த போது அவர்கள் ஊர்க்காரரான மதாரின் அறையில் தங்கி இருந்ததாகவும் அப்போது அவர்களுக்குத் தெரிந்த இத்ரிஸ் அங்கு வந்ததாகவும் மதாரும் இத்ரிசும் சேர்ந்து முருகனைக் கொல்லச் சதித் திட்டம் செய்ததைத் தாங்கள் கண்டதாகவும் சாட்சி சொல்ல அவர்களை மாடசாமி டீம் மிரட்டியது.
திருச்சியில் உள்ள குரு லாட்ஜில் தங்கவைத்து அவர்கள் இவ்வாறு மிரட்டப்பட்டனர். அடுத்த நாள் நீதிமன்றத்தில் கையெழுத்திட அவர்கள் வந்தபோதும் கூடவே வந்த மாடசாமி டீம் வாசலில் காத்திருந்தது. அப்போது இந்த இளைஞர்கள் இருவரும் ஓடி அங்கு இருந்த வழக்குரைஞர் கென்னடியிடம் நடந்தவற்றைச் சொன்னார்கள். அவர் உடனடியாக மாஜிஸ்ட்ரேட் முன் (Judicial Magistrate Court No 2, Thiruchirappalli)அழைத்துச் சென்று அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். நீதிபதி ராஜாராம் அவர்கள் மாடசாமி மற்றும் அவரது குழுவில் இருந்த 16 காவலர்கள் மீதும் கொலை செய்வதாக மிரட்டியது, பொய்சாட்சிகளை உருவாக்கியது, மனித உரிமைகளை மீறியது ஆகிய அடிப்படைகளில் விசாரணை நடத்த வேண்டும் என CBCID காவல் பிரிவுக்கு ஆணையிட்டார் (ஆக 1, 2011). இந்த ஒரு சான்று போதும் மயில்வாகனன் – மாடசாமி குழு எவ்வளவு முஸ்லிம் வெறுப்புடன் விசாரணைகளை மேற்கொண்டனர் என்பதற்கு. இந்தக் குழு மீது CBCID விசாரணை தொடங்கிய பின்னும் தொடர்ந்து அந்தக் குழு மதுரை வெடிகுண்டு வழக்கு விசாரணைகளைச் செய்ய அனுமதிக்கப்பட்டது. தனது அதிகாரிகள் விசாரணை என்கிற பெயரில் மேற்கொள்ளும் கொடும் மனித உரிமை மீறல்களைக் காவல்துறை தண்டித்ததாக வரலாறே இல்லை என்பதற்கு இது மேலும் ஒரு சாட்சி.
இந்தப் பின்னணியில்தான் அப்போது மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த வி.பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ் காவல்துறைத் தலைவருக்கு (DGP) எழுதிய இரு கடிதங்கள் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தன. 23.08.2013 அன்று எழுதப்பட்ட முதல் கடிதத்தில் மயில்வாகனன் – மாடசாமி டீம் தனது நேரடி வழிகாட்டலில் மிகச் சிறப்பாக மதுரை வெடிகுண்டு வழக்குகளைப் புலனாய்வு செய்து வருகிறது எனவும், ஆனால் குற்றவாளிகளைச் சரியாக அடையாளம் கண்டு கைது செய்ய இருந்த நிலையில் அவர் திருநெல்வேலிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் எனவும் இந்த இடமாற்ற ஆணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கோரி இருந்தார். 29.03.2013 அன்று டி.ஜி,பி க்கு பாலகிருஷ்ணன் எழுதிய இரண்டாவது கடிதத்தில் மதுரை வெடிகுண்டு வழக்குகளை விசாரித்து வந்த பல்வேறு புலனாய்வு மற்றும் உளவுப் பிரிவுகளான மதுரை SID, மதுரை SIT, மதுரை நகர SIC ஆகியவற்றுக்கும் முஸ்லிம் அடிப்படைவாதிகளாகவும் காவல்துறையின் தகவலாளிகளாகவும் (informants) செயல்படும் இஸ்மத், வகாப் ஆகியோருக்கும் இடையே நிலவும் ஆபத்து நிறைந்த இரகசிய உறவுகள் குறித்த தன் கவலைகளைப் பகிர்ந்திருந்தார். அப்படியான ஒரு ‘தீவிரவாதியிடம்’ இருந்து 25,000 ரூபாயை உளவுப் பிரிவைச் சேர்ந்த விஜய பெருமாள் எனும் தலைமைக் காவலர் பெற்றுக் கொண்டதை ஆதாரத்துடன் வெளிப்படுத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இருந்தார். அதோடு காவல்துறையைச் சேர்ந்த விஜய பெருமாளும் இந்த முஸ்லிம் ‘தீவிரவாதிகளும்’ சேர்ந்து பரமக்குடியில் சிலரை மிரட்டிப் பணம் பெற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டிய பாலகிருஷ்ணன் விஜய பெருமாளின் நடவடிக்கைகள் மதுரை மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் வெடிகுண்டுகள் வைப்பதற்கும் பயன்பட்டுள்ளது என்கிறார். இன்றுவரை விஜயபெருமாள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை. மாடசாமியின் இடமாற்றமும் ரத்தாகவில்லை.
கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் முறையீடு செய்தும் தன் இடமாற்றம் ரத்தாகாததைக் கண்ட மாடசாமி நேரடியாக ஊடகங்களிடம் பேசத் தொடங்கினார். ‘தி இந்து’ நாளிதழிலும் (அக் 23, 26, 2013), ஜூனியர் விகடனிலும் (நவ 03, 2013) அவரது கருத்துக்கள் வெளியாயின. அவற்றில் மதுரைக் குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான மூன்று பேர்களைத் தான் கண்டுபிடித்து விட்டதாகவும் ஆனால் காவல்துறையின் CBCID பிரிவின் Special Investigation Division ஐச் சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் மாரிராஜன் என்கிற இரு ADSP கள் தடுத்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். காவல்துறைப் பிரிவுகளுக்கிடையே இருந்த இந்த முரண்கள் அம்பலத்துக்கு வந்ததில் ஒன்று தெளிவாகியது. இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் காவல்துறைக்கும் தொடர்புண்டு அல்லது யார் அதைச்செய்திருப்பார் என்பது அவர்களுக்குத் தெரியும் என்பதுதான் அது. உண்மைகள் வெளிவந்தால் காவல்துறைக்கே பிரச்சினைகள் வரும் என்பதாலேயே ஐந்து ஆண்டுகள் ஆகியும் இந்தப் புலன் விசாரணைகள் இறுதியை எட்டவில்லை. இந்த அறிக்கைகளை எல்லாம் சுட்டிக்காட்டி SDPI கட்சியின் மாவட்ட வழக்குரைஞர் அணிச் செயலாளர் அப்துல் காதர் ஒரு ரிட் மனுவை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்தார் (W.P –MD- No. 4711 of 2014). தமிழ்நாடு காவல்துறை விசாரித்தால் உண்மைகள் வெளிவராது எனவும் மதுரை வெடிகுண்டு விசாரணை முழுமையையும் CBI க்கு மாற்றுமாறும் அவர் அந்த மனுவில் கோரியுள்ளார்.
மதுரை காவல்துறை மேற்கொண்டுள்ள சமாளிப்பு நடவடிக்கைகளும் அதன் மூலம் வெளிப்படும் முரண்களும் இந்த வெடிகுண்டு வழக்குகள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக CBI விசாரணைக்கு மாற்றப்படும் வாய்ப்புள்ளது என்பதை அறிந்த மதுரை காவல்துறையினர் விரைந்து இந்த வழக்கு விசாரணைகளில் சில் மாற்றங்களைச் செய்தனர். இதன் முதற் கட்டமாக ஒரு புதிய ஆணையை வெளியிட்டனர் (மாநகர் சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையர் செயல்முறை ஆணை C.No.66/ Camp/ DC/ L&O/ M.C. 2015 dated 25.01.2015). இதன்படி மதுரை மாநகர் எல்லைக்குட்பட்ட வெடிகுண்டு வழக்கு விசாரணைகளை விசாரிக்க அண்ணா நகர் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் என்பவர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த “மார்ச் 01, 2015 அன்று தனக்குக் கிடைத்த இரகசிய தகவல்” ஒன்றின் அடிப்படையில் அண்ணா நகர் இராமர் கோவில் சைக்கிள் குண்டு வெடிப்பு வழகில் (குற்ற எண் 404/2012) தொடர்புடைய சம்சுதீன் என்பவரைக் கைது செய்துள்ளதாக அறிவித்தார். அந்த சம்சுதீன் மீது அவனியாபுரம் காவல் நிலையத்தில் புதிய வழக்கொன்றைப் (262/2015) பதிவு செய்து, அவரது “ஒப்புதல் வாக்குமூலம்” நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி மதுரையைச் சுற்றி நடந்த குண்டு வெடிப்புகள் பலவற்றை இந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் கண்டுள்ள நபர்கள்தான் செய்தனர் எனக் கூறப்பட்டது. இத்தகைய ஒப்புதல் வாக்குமூலங்கள் பலவும் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வாக்குமூலம் அளிப்பவரிடம் படித்துக் கூடக் காட்டாமல் கையொப்பம் பெறப்படுபவை என்பது குறிப்பிடத் தக்கது.
மதுரை காவல்துறை இந்த வழக்குகளின் விசாரணையில் ஏற்படுத்தும் இடியாப்பச் சிக்கல் இத்தோடு முடியவில்லை. சிவகுமாரின் இந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே இந்த குண்டு வெடிப்புகள் குறித்து மார்ச் 21, 2015 அன்று மதுரை Q பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை இன்னொரு வழக்கைப் பதிவு செய்தது. இந்தப் புதிய வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் நாம் தொடக்கத்தில் குறிப்பிட்ட 2011 முதல் 2015 வரையிலான அனைத்து வெடிகுண்டு வழக்குகளையும் கொண்டுவந்தனர். இந்த வழக்குகள் அனைத்திலும் 1908 ம் ஆண்டு Explosive Substances Act பிரிவுகள் 3,4,5 மற்றும் 120 (B) and 34 of IPC ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றங்கள் சுமத்தப்பட்டன. இதில் 11 பேர்கள் பெயர் குறிப்பிட்டும் மற்றும் சிலர் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்த வழக்குகள் அனைத்திற்கும் ஏற்கனவே அந்தந்தக் காவல் நிலையங்களில் தனித்தனியே வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. இந்தப் பழைய முதல் தகவல் அறிக்கைகளுக்கும் இன்றைய அறிக்கைக்கும் இடையில் பல முரண்கள் உள்ளன. இந்த முரண்கள் அவை அனைத்தும் அப்பட்டமாக ஜோடிக்கப்பட்ட பொய் வழக்குகள் என்பதைக் காட்டுகின்றன். எமது வழக்குரைஞர் குழு சுட்டிக்காட்டியுள்ள அப்படியான முரண்களில் சில இங்கே: 1. 2011 மாட்டுத்தாவணி டாஸ்மாக் குண்டு வெடிப்பு வழக்கு: ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான விசாரணையில் குண்டு வைத்தது உமர் ஃபாரூக் எனப் பதிவாகியுள்ளது. இன்றைய Q பிரிவு முன்வைக்கும் வாக்குமூலத்தின்படி அதைச் செய்தது ஹாரூன் எனச் சொல்லப் படுகிறது. 2. 2011 கே. புதூர் அரசு டிப்போ பேருந்து குண்டு வழக்கு: பழைய வாக்குமூலப்படி குண்டு வைத்தது இஸ்மத்; Q பிரிவு விசாரணையின்படி இது ஹாரூன். 3. 2012 இராமர் கோவில் சைக்கிள் குண்டு வழக்கு: சிவகுமார் விசாரணையில் இதைச் செய்தது பிலால் மாலிக், தௌபீக் ஆகியோர், ஹாரூன். Q பிரிவு விசாரணையில் தவ்பீக் பெயர் மட்டும் உள்ளது. 4. 2013 நவம்பர் சுங்கம் பள்ளிவாசல் அக்பர் அலி கார் குண்டு வழக்கு: சிவகுமார் விசாரணையின்படி இதைச் செய்தது ஹாருனுன் அசாருதீனும். Q பிரிவு விசாரணையில் இது மைதீன் பீர் ஆக மாறுகிறது. 5. 2014 சுங்கம் பள்ளிவாசல் காஜா மைதீனின் இரு சக்கர வாகனத்தில் குண்டு வெடித்த வழக்கு: சிவகுமார் விசாரணையின்படி அது உமர் ஃபாரூக்; Q பிரிவு விசாரணையின்படி அது மைதீன் பீர். 6. 2012 ஆகஸ்டில் உமர் ஃபாரூக் கடைக்கு வந்த பார்சல் குண்டு வழக்கு: சம்பவம் நடந்த உடன் பதியப்பட்ட தெற்குவாசல் காவல் நிலையமு.த.அ யின் அடிப்படையில் 96 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு குற்றவாளி அசாருதீன்தான் என அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் இன்றைய Q பிரிவு விசாரணையின்படி பார்சல் குண்டைக் கொண்டு வந்தது தவ்பீக். விசாரணையில் இப்படி ஏற்படுத்திய அதிரடித் திருத்தங்கள் இத்தோடு முடியவில்லை. அடுத்து மேலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார்கள். திடீரென இந்த வழக்குகள் C.B.C.I.D யின் S.I.D வசம் ஒப்படைக்கப்பட்டது. C.B.C.I.D யின் ADSP மாரிராஜன் கடந்த 24.03.2015 அன்று இதை மறு வழக்காக மீள்பதிவு (Re – Register) செய்தார். அதன்பின் இந்த வழக்குகளின் விசாரணை அதிகாரிகளாக சீனிவாசன், முருகவேல், மணிவண்ணன், சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டாலும் நடைமுறையில் இந்த வழக்குகள் அனைத்தையும் இப்போது மாரிராஜனே விசாரித்து வருகிறார். நாங்கள் சந்தித்த அனைவரும் இதை உறுதி செய்தனர்.
இந்தப் புதிய திருப்பங்களின் ஊடாக இவர்கள் உருவாக்கிய ஒரு புதிய வழக்கு அதிர்ச்சியை அளைக்கக் கூடியது. மார்ச் 21, 2015 அன்று மேலூரில் அப்போது கூரியர் ஏஜன்சி ஒன்றை வைத்திருந்த அப்பாஸ்மைதீன் (43) என்பவரை Q பிரிவு போலீசார் பெரும் படையுடன் வந்து இழுத்துச் சென்று ஒரு நாள் முழுவதும் அவரைக் கடுமையாக அச்சுறுத்தி இறுதியில் பிரான் மலைக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்த ஏராளமான காவல்துறையினர் முன் அவரை நிறுத்தி, அடித்து, அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு வாளியைக் கை நீட்டிக் காட்டச் சொல்லி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கீழே காத்திருந்த பத்திரிகையாளர்களுக்கும் அந்த வாளி குண்டுக்குக் காரணமானவர் அப்பாஸ் மைதீன் தான் எனச் சொல்லப்பட்டது. பின் அவரிடம் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஒரு வாக்குமூலத்தில் கையொப்பமும் பெறப்பட்டது. பின் மீண்டும் மார்ச் 31, 2015 அன்று அவரை ADSP மாரிராஜன் ‘கஸ்டடி’ எடுத்து இன்னொரு வாக்குமூலத்தில் கையொப்பம் வாங்கினார். ஒரே நபர், ஒரே வழக்கு குறித்துத் “தந்துள்ள” இரு வாக்கு மூலங்களிலும் பல வேறுபாடுகள் உள்ளன. Q பிரிவு முன் வைத்துள்ள வாக்குமூலத்தில், “2011 ம் ஆண்டு ஹாரூன் மூலம் ஒரு வெடிகுண்டு வைத்தோம். அது வெடித்தது” என அப்பாஸ் மைதீன் கூறுவதாக உள்ளது. பத்து நாட்களுக்குப் பின் ADSP மாரிராஜன் பதிவு செய்துள்ள வாக்குமூலத்தில், “பேக் கடை செய்யதுவும், ஹாருனும் வெடிகுண்டை மதுக்கடை முன் வைத்து வெடிக்கச் செய்வது எனத் தீர்மானம் செய்யப்பட்டது. உமர்ஃபாரூக் வெடிகுண்டு செய்து தருவதாகக் கூறினார். அப்போது செல்வகனி, தலைவர் சீனி, வக்கீல் பயாஸ், வக்கீல் சௌகத் அலி, ஆட்டோ யாசின் ஆகியோர் தங்களிடம் இருந்த பணம் 5000 த்தை வெடிமருந்துப் பொருள் வாங்குவதற்கு உமர் ஃபாரூக்கிடம் கொடுத்தனர். இரண்டு மூன்று நாட்கள் கழித்து மீண்டும் நாங்கள் செருப்புகடை செய்யது கடைக்கு வந்தோம். அப்போது உமர் ஃபாரூக் கையில் ஒரு பேக் கொண்டு வந்திருந்தார். அதிலிருந்து பேட்டரி, வெடிமருந்து மற்றும் டைமருடன் கூடிய ஒரு டப்பாவை வெளியில் எடுத்தார். பேக் கடை செய்யதுவிடமும் ஹாருனிடமும் அதை எப்படி வெடிக்கச் செய்வது என்று சொல்லிக் கொடுத்தார். பின்னர் வெடிகுண்டை எடுத்து சென்று மதுக்கடை பார் முன்பு வைக்கச்சொல்லி பேக் கடை செய்யதுவிடமும் ஹாருனிடமும் சொல்லிவிட்டு நாங்கள் அங்கிருந்து கிளம்பி விட்டோம். அன்று இரவு மாட்டுத்தாவணி எதிரே உள்ள மதுக்கடையில் வெடிகுண்டு வெடித்தது” என விரிவாக உள்ளது. நாங்கள் நெல்பேட்டையில் சந்தித்த பலரும் “உன்னை 13 வழக்குகளிலும் சிக்க வைத்து விடுகிறேன்” என மாரிராஜன் உள்ளிட்ட காவல்துறையினர் மிரட்டி வருவதாகக் கூறினர். யாரை எல்லாம் காவல்துறை குறி வைத்துள்ளதோ அவர்களை எல்லாம் இப்படிக் காவல்துறையாலேயே தயாரிக்கப்பட்ட இந்த அப்பாஸ் மைதீனின் வாக்குமூலத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
நாங்கள் சந்தித்தவர்கள் சொன்னவை
முகமது முபாரக் எனப்படும் உமர் ஃபாரூக் (35), புது ராமநாதபுரம் : “தற்போது 13 வழக்குகள்ல என்னைச் சேர்த்துள்ளதாக நேற்று கூட ஆய்வாளர் சீனிவாசன் சொன்னார். இப்டி பொய் வழக்கு போடுறீங்களே, நீங்க நல்லா இருப்பீங்களா, என் பெண்டாட்டி பிள்ளைங்க மாதிரி உங்க பெண்டாட்டி புள்ளைங்க கஷ்டப்பட மாட்டாங்களான்னு கேட்டேன். ‘என்ன சபிச்சிராதப்பா. நான் என்ன பண்றது. எனக்கு எல்லாம் தெரியும். என்ன செய்யிறது Q பிராஞ்ச் ஏற்கனவே உன்னை இந்த வழக்குகள்ல சேர்த்துருக்கதால ஒண்ணுமே பண்ண முடியல. நீ 13 வழக்குலயும் AB (முன் ஜாமீன்) வாங்கிடு’ என்றார். நான் இமாம் அலிக்கு அடைக்கலம் கொடுத்தது அப்படி இப்படின்னு 2004 முதல் 2007 வரை மூணரை வருஷம் ஜெயில்ல இருந்தேன். ஹை கோர்ட்ல எல்லா வழக்கிலயும் விடுதலை ஆனேன். இப்ப மீன் வியாபாரமும் ரியல் எஸ்டேட்டும் பண்றேன். விஜய பெருமாள் என்கிற ஏட்டு என்னிடம் வந்து ஒரு ரியல் எஸ்டேட் டீல்ல அவருக்கு வேண்டிய ஒரு மூணாவது நபருக்குச் சலுகை பண்ணச் சொன்னார். என்னால முடியல. இப்ப என்னைப் பழி வாங்குறாங்க. இமாம் அலி வழக்குபோது நான் தலைமறைவா இருந்தப்போ போலீஸ் தொல்லை தாங்காம எங்க அப்பா மீரான் கனி மனித உரிமை செல்பாட்டாளரான ஹென்றி டிபேனிடம் உதவி கேட்டதுக்காக வங்கிக் கொள்ளை வழக்கு ஒண்ணுல அவரையும் என் அக்கா மாப்பிளையையும் பொய் வழக்கு போட்டு உள்ள தள்ளினாங்க. அதிலேயும் அவங்களை நீதிமன்றம் விடுதலை பண்ணிச்சு”
பாண்டு அலி என்கிற முகமது அலி (39), த.பெ முகமது சுல்தான் நெல்பேட்டை: “என்னையும் 13 வழக்குகள்ல சேர்த்திருக்காங்க. அந்த வழக்குகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. இந்த வழக்குகள் எதுலயும் நான் இதுவரை கைது செய்யப்படல. உமர் ஃபாரூக் என்னோட மைத்துனர். இமாம் அலி தொடர்பான வழக்குல 10 வருஷம் ஜெயில்ல இருந்துருக்கேன். அதுக்குப் பிறகு நான் எந்த தீவிர நடவடிக்கையிலயும் இல்ல. ADSP மாரிராஜன் என்கிட்ட நல்லா பேசுவாரு. தேனி வெடிகுண்டு வெடிப்புக்கு முதல் நாள் நெல்பேட்டை பக்கம் வந்தாரு. நான் தேசிய லீக் கட்சியில இருந்து செயல்படுறேன். அவங்க 2012, செப் 29 அன்னிக்கு கம்பத்தில இமாம் அலி நினைவுநாள்னு அறிவிச்சிருந்தாங்க. அதுக்குப் போகலியான்னு மாரிராஜன் என்னைக் கேட்டாரு. ‘அவசியம் போப்பா. கட்சியில் பொறுப்புல இருக்கிறவங்க நிகழ்ச்சிகள புறக்கணிக்கக் கூடாதுல்ல’ என்றார். அதுல ஏதோ சூது இருக்குன்னு எனக்குத் தெரிஞ்சு போச்சு. அதே மாதிரி அன்னிக்கு தேனியில குண்டு வெடிச்சுது…”
வழக்குரைஞர் சவுக்கத் அலி (36), த.பெ அப்துல் அஜீஸ், நெல்பேட்டை: “நான் ஹைகோர்ட்ல வழக்குரைஞரா இருக்கேன். என்னையும் 13 வழக்கில சேர்த்திருக்காங்க. ஒரு வழக்கில named accused. மற்ற வழக்குகள்ல confession ல கொண்டு வந்திருக்காங்க. நான் இதுக்கு முன்னாடி எந்த வழக்குலையும் சம்பந்தப்பட்டதோ விசாரிக்கப்பட்டதோ இல்லை. உமர் ஃபாரூக்கிற்கு நான் வழக்குரைஞர். அவரோட ரியல் எஸ்டேட் பார்ட்னர். அதனால என்னைப் பழி வாங்குறாங்க”
ஜரீனா பேகம் க/பெ பீர் முகம்மது, நெல்பேட்டை (ராமர் கோவில் குண்டு வழக்கில் இரண்டு வாரங்களுக்கு முன் கைதாகிச் சிறையில் உள்ள அபூபக்கர் சித்திக்கின் அம்மா): “என் மகன் எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டான். அரசியலுக்கும் அவனுக்கும் சம்பந்தமில்ல. அவன் ஒரு செல்போன் கடை வச்சிருக்கான். அதுல ஏதாவது திருட்டுபோன் பிரச்சினையில ரெண்டொரு தடவை கூப்பிட்டு விசாரிச்சுருக்காங்க. மத்தபடி இந்த குண்டு வழக்குகள் எதுலையும் அவனை விசாரிச்சது இல்ல. பெருநாள் முடிஞ்சு டூர் போய்ட்டு வந்தான். இப்டி அவனைப் புடிச்சுட்டுப் போயி ராமர் கோவில் வழக்குல சேர்த்துட்டாங்க…” ஜரீனா பேகம் அழுதுகொண்டே இதைச் சொன்னபோது அங்கிருந்தவர்கள் அதோடு இன்னொரு சம்பவத்தைச் சொன்னார்கள். ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் ஒரு குழு வந்து சித்திக்கைக் கைது செய்தபோது அவரது கடையில் வேலை செய்யும் சையது முகமது அதை வீடியோ எடுத்துள்ளார். உடனே அவர் செல்போனை சீனிவாசன் டீம் பிடுங்கிச் சென்றுள்ளது. அதைத் திரும்பப் பெறக் காவல் நிலையம் சென்றபோது சையது முகமதுவை ஒரு நாள் முழுக்க ஸ்டேஷனிலேயே காக்க வைத்து விசாரித்துள்ளனர். விசாரணை முடிந்து வந்த சையது மிகவும் மனம் சோர்ந்து காணப்பட்டுப் பின் தற்கொலை செய்து கொண்டார். காவல்துறையின் மிரட்டல் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதி மக்கள் கூறினர். சையதுவின் உடல் அடக்கம் செய்யப்படும்போது தேவை இல்லாமல் ஆய்வாளர் சீனிவாசன் அந்த இடத்தில் ரொம்ப நேரம் சுற்றிச் சுற்றி வந்தார் எனவும் கூறுகின்றனர்.
வழக்குரைஞர் முகமது அலி ஜின்னா த.பெ கே.ஏ. உமர் பாய், நெல்பேட்டை: “என்னையும் 13 வழக்குகளில் சேர்த்துள்ளனர். எனது 17 வயதில் போலீசை அடித்ததாக என் மீது ஒரு வழக்கு. அதன் பின் 2005 வரை ஏழு வழக்குகள் போட்டார்கள். அதில் ஆறு வழக்குகளில் நான் விடுதலை செய்யப்பட்டுள்ளேன். மற்ற ஒரு வழக்கும் ரத்தாகி விட்டது. தமிழ்வீரன் எனும் ஒரு இந்துமுன்னணித் தலைவரைக் கொலை செய்ய முயன்றேன் என ஒரு வழக்குத் தொடர்ந்து குண்டர் சட்டமும் போட்டார்கள். அந்தத் தமிழ்வீரனே அது பொய் வழக்கு என நீதிமன்றத்தில் வாதாடி எனக்கு விடுதலை வாங்கித் தந்தார். இந்த ஆண்டு பிப்ரவரி 25 ந்தேதி ஒரு 30 போலீஸ்காரகள் வந்து என் வீட்டில் ‘சர்ச் வாரன்ட்’ காட்டித் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். என்னை மரியாதைக் குறைவாகப் பேசவும் செய்தார்கள். கடைசியில் ஒன்றும் கிடைக்கவில்லை என எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார்கள். இமாம் அலியைக் காட்டிக் கொடுத்தவர்களைப் பழி வாங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் ‘அல் முத்தகீம் ஃபோர்ஸ்’ என்கிற தீவிர அமைப்பிற்கு நான் தலைவன் என அபாண்டமாகப் பழி சுமத்துகிறார்கள். அது அப்பட்டமான பொய். நான் கவுரவமாக வக்கீல் தொழில் நடத்துகிறேன். நான் எந்த வழக்கில் வக்கீலாக ஆஜர் ஆனேனோ அதே வழக்கிலும் என்னைக் குற்றவாளியாகச் சேர்த்தார்கள். குற்றம் சுமத்தப்பட்டவர்களோடு ஒரு வழக்குரைஞர் என்கிற முறையில் பழகுவதே தவறா? நான் மன நிம்மதி இன்றித் தவிக்கிறேன்,….”
அம்சவல்லி ஓட்டல் அருகில் பீடா கடை வைத்துள்ள ஃபரீத்கான் அவரது சகோதரர் மன்சூர்கான் இருவரையும் நாங்கள் சந்தித்தபோது அவர்கள், தங்கள் கடையில் சில நாட்களுக்கு முன் யாரோ ஒருவர் இரவு 11 மணி வாக்கில் வந்து 10 இனிப்பு பீடா ஆர்டர் செய்துவிட்டு, “தயாரித்து வையுங்கள். வருகிறேன்” எனச் சொல்லி ஒரு பையையும் கொடுத்து விட்டுச் சென்றதாகவும் பின் வரவே இல்லை என்பதால் அடுத்த நாள் அந்தப் பையைத் திறந்து பார்த்தபோது அது வெடிகுண்டு போலத் தெரிந்ததால் காவல்துறைக்குச் சொன்னதாகவும், அவர்கள் வந்து சோதனையிட்டு அதை எடுத்துச் சென்றதாகவும் கூறினர்.

ஆட்டோ யாசின் த.பெ காதர் மைதீன், நெல்பேட்டை மீன்மார்கெட் அருகில்: ”எந்த வழக்குன்னு தெரியல. ஆனா வழக்கில சேர்த்துருக்காங்களாம். வக்கீல் சொன்னாரு. இதுக்கு முன்னாடி எந்த வழக்கும் என்மீது கிடையாது. 2013ல் மயில்வாகனன், மாடசாமி டீம் நிறைய நெல்பேட்டைப் பையன்கள அழைச்சிட்டுப் போயி அடிச்சு சித்திரவதை பண்ணினாங்க. என்னையும் எந்தத் தப்பும் பண்ணாமலேயே ADSP ஆபீசில் வச்சு அடிச்சாங்க. நான் வெளியே வந்து அமானுல்லா என்கிற வழக்குரைஞர் மூலமா இன்ஸ்பெக்டர் மாடசாமி மேல ஒரு பிரைவேட் கம்ப்ளெயின்ட் கொடுத்தேன். அந்த கோவத்துல இப்ப என் மேல பொய் வழக்கு போடுறாங்க. எனக்கு இந்த ஆட்டோ தொழில் தவிர வேற வருமானம் இல்ல..”
பிரியாணி மைதீன் த.பெ பக்ருதீன், நெல்பேட்டை: “கல்யாண ஆர்டர்க்கு பிரியாணி செஞ்சு கொடுப்பது என் தொழில். 2002ல் இமாம் அலி வழக்கில என்னை சேர்த்திருந்தாங்க. அதுல எனக்கு 2 வருஷம் தண்டனை. அதுக்கு அப்புறம் எட்டு வழக்கு போட்டாங்க. ஒரு கொலை கேஸ் உட்பட. எல்லாத்துலையும் நான் விடுதலை ஆயிட்டேன். இப்ப பிரியாணி தொழில்தான் செய்றேன். அன்னிக்கு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வந்து என்னை வழக்கில் சேர்த்துள்ளதா சொன்னாரு. எந்த வழக்குன்னு தெரியல.
அப்பாஸ் மைதீன் (43) த.பெ ஷேக் தாவூது, மேலூர்: “நான் ரொம்ப சாதாரண குடும்பம். எனக்கு இரண்டு மனைவி. முதல் மனைவிக்குக் குழந்தை இல்ல. இரண்டாவது மனைவிக்கு நாலு பிள்ளைகள். ஒரு கூரியர் ஏஜன்சி எடுத்திருந்தேன். எனக்கு எந்த அரசியல் தொடர்பும் கிடையாது. மார்ச் 21, 2015 அன்னிக்கு யாரோ வந்து நூறு தேங்கா கூரியர் அனுப்பனும்னு கூப்பிட்டாங்க. கீழே இறங்கிப் போனா ஒரு வேன்ல ஏற்றிக் கொண்டு போய்ட்டாங்க. இரவு வரை என்னை என்னென்னவோ கேட்டாங்க. யார் யாரோ வந்து ஏதேதோ விசாரிச்சாங்க. ஒண்ணும் எனக்குப் புரியல. பயந்து போனேன். சாயந்திரம் என்னை பிரான் மலைக்கு அழைச்சிட்டுப் போனாங்க. அங்கே நிறைய பத்திரிகையாளருங்க இருந்தாங்க. மேலே கொண்டுபோனாங்க. ஏராளமாக அங்கே போலீஸ் அதிகாரிங்க இருந்தாங்க. அங்கே தூரத்தில ஒரு வாளியில என்னமோ இருந்துச்சு.. அதைக் கையை நீட்டி காமிக்கச் சொன்னாங்க. “ஏன்” ன்னேன். “என்னடா எதிர்த்தா பேசுறேன்னு அடிச்சாங்க. நான் கையை நீட்டினேன் போட்டோ பிடிச்சுட்டாங்க. அந்த வாளியில என்ன இருந்துச்சுன்னு கூட எனக்கு முழுசா தெரியாது. அப்ப அங்கே எங்க ஊரு முபாரக்கையும் கொண்டு வந்து அடிச்சு அதே மாதிரி கையை நீட்டச் சொல்லி போட்டோ எடுத்தாங்க. சார், அவன் என்னைவிட ரொம்ப அப்பாவி, என் சொந்தக்காரந்தான். ஆனாலும் அவன் கிட்ட நான் அதிகமாப் பேசுனது கூடக் கிடையாது. எங்க இரண்டு பேருக்கும் எந்த இயக்கத் தொடர்பும் கிடையாது. நானாவது தாடி வச்சிருக்கேன். தொழுகைக்குப் போவேன். இஸ்லாமிய ஒழுக்கங்களைக் கடை பிடிப்பேன். அவன் அதையும் செய்யுறது கிடையாது. அப்புறம் எங்களை தனித்தனியா கொண்டு போயி அடுத்த நாள் Q பிராஞ் போலீஸ் எதையோ கொண்டு வந்து என் கிட்ட கையெழுத்து வாங்கினாங்க. படிச்சு கூட காட்டல. பத்து நாளைக்கப்புறம் கஸ்டடியில் எடுத்து மாரிராஜன் டீம் மறுபடியும் ஒரு வாக்கு மூலத்தை அவங்களாவே எழுதி கையெழுத்து வாங்கினாங்க. சார். இது ரொம்ப அநியாயம். என் பழைய தொழில் போச்சு. இப்ப ஒரு செருப்புக் கடையில் வேலை செய்றேன். எனக்கு இது தாங்க முடியாத அனுபவம். என்னை ஏன் இதற்குத் தேர்ந்தெடுத்தாங்கன்னு என்னால புரிஞ்சுக்கவே முடியல. படுத்தா தூக்கம் வரமாட்டேங்குது சார்…”
அடுத்து அப்பாஸ் மைதீனுடன் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள முபாரக்கிடம் (வயது 24, த.பெ ஷேக் என்கிற மீரான் மைதீன், மேலூர்) பேசினோம். சின்னப் பையன் என்பதும் மிகவும் பயந்துபோயுள்ளான் என்பதும் குரலிலேயே தெரிந்தது. அப்பாஸ் சொன்ன அதே கதையை அவனும் திருப்பிச் சொன்னான். இந்தச் சின்ன வயதில் அந்தக் கோடூரமான அனுபவத்தை அவன் சந்தித்தபோது குணாளன் என்பவரது செருப்புக் கடையில் வேலை செய்து கொண்டு இருந்திருக்கிறான். ஆறு மாதம் கழித்து பிணையில் அவன் வெளியே வந்தபோது யாரும் அவனுக்கு வேலை கொடுக்கத் தயாராக இல்லை. கடந்த ஆறு மாதமாக ஏதோ ஒரு வெல்டிங் பட்டறையில் வேலை செய்கிறான். தினம் 170 ரூ ஊதியமாம். அதை வைத்துத்தான் குடும்பம் நடக்கிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. இதை எழுதும்போது ஏதோ ஒரு தகவலை உறுதி செய்ய போனில் தொடர்பு கொண்டோம். அவன் அம்மா பேசினார்கள். வேலைக்குப் போவிட்டானாம். “ஐயா, நாங்க எல்லாம் ஏழைங்க அய்யா, எங்களுக்கு யாரும் ஆதரவு இல்லைங்க அய்யா. இது ரொம்ப அநியாயம் அய்யா. அவன் ரொம்பச் சின்னப் பையன் அய்யா.. அவனுக்கு யாரும் இப்ப வேலை கூடக் குடுக்க மாட்டெங்குறாங்க அய்யா..” என அந்த அம்மா புலம்பி அழுதார்.
அதிகாரிகள் சந்திப்பு
சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் ADSP மாரி ராஜனை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். மிக்க பொறுமையாகவும் விரிவாகவும் அவர் எங்களுடன் பேசினார். இந்த வெடிகுண்டுகள் அனைத்தும் மிகச் சாதாரணமான பட்டாசுக் குண்டுகள் என அவர் சொல்லியதை வேறோர் இடத்தில் பதிவு செய்துள்ளோம். இந்த வெடிகுண்டு வழக்கு விசாரணையைப் பற்றி அவரிடம் கேட்டபோது, “நான் இப்ப அதிலேருந்து விலகிட்டேன். இந்த வழக்குகளை நாங்க விசாரிக்கக் கூடாதுன்னு ரிட் மனு ஒன்னு போட்ருக்காங்க அதனால நான் அந்த விசாரணையில இப்ப ஈடுபடுவதில்லை” என்றார். கைது செய்யப்படுகிறவர்கள் பலரும் அப்பாவிகள் எனக் கேள்விப்படுகிறோமே என நாங்கள் கேட்டபோது அவர் அதை மறுக்கவில்லை. “அப்பாவிகளும் இருக்கலாம். முஸ்லிம்களுக்குள் பல உட் பிரிவுகள் இருக்கு. இவங்களுக்குள்ளேயே போட்டி பகைமைகள் இருக்கு. ஒருவர் மேல ஒருவர் புகார் கொடுத்துக்கிறாங்க. அதனாலதான் இப்படிக் கைதுகள் நடக்குது. அப்புறம் இந்த முஸ்லீம்கள்கிட்ட இருக்கிற ஒரு கெட்ட பழக்கம் இவங்க எல்லாம் போலீசுடன் நெருக்கமா இருக்கிறதை ஒரு பெருமையா நினைக்கிறாங்க. அதனாலயும் சில பிரச்சினைகள் ஏற்படுது….”

“ஆய்வாளர் மாடசாமி என்பவர் உங்கள் மீதெல்லாம் கொடுத்துள்ள புகார் விசாரிக்கப்பட்டதா, ஏட்டு விஜயபெருமாள் ஒரு தீவிரவாதியிடமிருந்து பணம் வாங்கியதாகக் குற்றச்சாட்டு உள்ளதே அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?” எனக் கேட்டோம். “மாடசாமியிடம் விளக்கம் கேட்டு இருக்காங்க. அது குறித்து மேலதிகாரிங்களைத்தான் கேட்கணும் .விஜயபெருமாளிடம் விளக்கம் கேட்டதுக்கு அவர் தனக்கு அந்த நபர் கொடுக்க வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளார்னு பதில் சொல்லி இருக்கார்” என்றார்.
நாங்கள் புறப்படும்போது, “ஆண்டவன் செயலால் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அப்பாவிகளை விடுதலை செய்வதில் தடையில்லை. என் மீதுள்ள ரிட் வழக்குகள் திரும்பப் பெறப்பட்டால் நானே இந்த வழக்குகளை விசாரித்து நல்லபடியாய் முடித்து வைப்பேன்” என்றார்.

அடுத்து நாங்கள் உளவுத் துறை உதவி ஆணையர் முத்துராமலிங்கம் அவர்களைச் சந்தித்தோம். “ஆரப்பாளையம் பஸ் குண்டு வழக்கு, பீடா கடை பார்சல் குண்டு வழக்கு இந்த இரண்டையும்தான் நகர காவல்துறை (city police) விசாரிக்குது. மற்றதெல்லாம் Q பிராஞ், CBCID இவங்க கிட்ட கொடுத்தாச்சு. இந்த இரண்டையும் கூட அவங்க கிட்ட மாத்தலாம்னு இருக்கோம். மற்ற வழக்குகளைப் பற்றித் தெரியணும்னா அந்த வழக்குகளை இப்போ விசாரிக்கிற ஆய்வாளர் சீனிவாசனைத்தான் நீங்க கேட்கணும்” எனச் சொல்லி அவரது தொடர்பு எண்ணையும் எங்களுக்குத் தந்தார்.
அடுத்து நாங்கள் நகர காவல் ஆணையர் ஷைலேந்திர குமார் யாதவ் அவர்களைச் சந்தித்தோம். பொய் வழக்குகள் பற்றிய எங்களின் புகார்களைச் சொன்ன போது, “ஆரப்பாளையம் பஸ் குண்டு வழக்கைத்தான் நாங்க விசாரிக்கிறோம். அது நேரடியா என் கண்காணிப்பில் விசாரிக்கப்படுது. அது பொய் வழக்கு இல்ல. குற்றம்சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒத்துக் கொண்டு தெளிவாக வாக்குமூலம் கொடுத்திருக்காங்க. மற்ற வழக்குகள் பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு நான் பதில் சொல்ல முடியாது” என முடித்துக் கொண்டார். பல்வேறு புலன் விசாரணை முகமைகளுக்கு இடையில் உள்ள போட்டிகளால் அப்பாவிகள் பலர் பாதிக்கப்படுவது பற்றி நாங்கள் கேட்கத் துவங்கியபோது, “ஒரு குற்ற விசாரணை என்பது போலீசின் புலன் விசாரணையோடு முடிந்து விடுவதில்லை. அதற்குப் பின் நீதிமன்றம் இருக்கிறது. குறுக்கு விசாரணைகள் இருக்கின்றன, வக்கீல்களின் வாதங்கள் இருக்கிறது. அவற்றின் மூலம் உண்மைகளைக் கொண்டுவரலாமே” என்றார்.
தற்போது இந்த வெடிகுண்டு வழக்குகளை விசாரித்து வரும் ஆய்வாளர் சீனிவாசன் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டபோது தான் விசாரிக்கும் வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளதாகவும், உயர் அதிகாரிகளைக் கேட்காமல் தான் ஏதும் பேச இயலாது எனவும் குறிப்பிட்டார். அப்பாவிகள் பலர் வழக்கில் சிக்கவைக்கப் பட்டுள்ளார்களே என்றபோது அதைப் பற்றியெல்லாம் விசாரணையில் உள்ளதால் ஒன்றும் சொல்வதற்கில்லை எனவும் எதற்கும் நேரில் வாருங்கள் எனவும் கூறினார்.
எமது பார்வைகள்
இந்திய அளவில் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுவதும். பிணையில் வெளிவர இயலாமல் அவர்கள் நீண்ட வருடங்கள் சிறைகளில் வாடி, தங்களின் இளமையைத் தொலைத்து இறுதியில் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்படுவதும் இன்று கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. இப்படிப் பாதிக்கப்படுவது பெரும்பாலும் ஏன் முஸ்லிம்களாகவே உள்ளனர்? அவர்களைக் கைது செய்வது எளிது. அவர்கள் மீது சுமத்தப்படும் குற்றங்களை நிறுவுவதற்கு அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. அவர்கள் மீது குற்றத்தைச் சுமத்தினாலே போதும். அதுவே அந்தக் குற்றங்களின் நிரூபணங்களாகவும் ஆகிவிடுகின்றன. இந்த நிலை மிகவும் கவலைக்குரிய ஒன்று.
இதன் பொருள் குண்டு வைப்பவர்கள் மீது கடுமை காட்டக் கூடாது என்பதல்ல. அதே நேரத்தில் எக்காரணம் கொண்டும் குற்றமற்ற அப்பாவிகள் தண்டிக்கப்படக் கூடாது என்பதுதான். இப்படிச் சொல்வது வெறும் அற அடிப்படையான கூற்று மட்டுமல்ல. ஒரு ஜனநாயக அமைப்பு உறுதியாக நிலைப்பதற்கான அடிப்படியான நிபந்தனை இது. இந்த அமைப்பில் நமக்கு நீதி கிடைக்காது என்கிற எண்ணம் எந்தத் தரப்புக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது. அப்படி உருவாகும் அவநம்பிக்கை (despair) அமைப்பின் மீது மட்டுமல்ல, சகமனிதர்கள் மீதும் வெறுப்பை விதைக்கிறது. இந்த வெறுப்பு அவரை வன்முறையாளராக்குகிறது. “அவநம்பிக்கை ஒரு குடிமகனை வன்முறையாளனாக்குகிறது. வேட்டையாடப்படுபவன் வேட்டை ஆடுபவனாக மாறுகிறான். அவநம்பிக்கை ஒரு கொடூரமான கொலை ஆயுயதம்” (Despair can turn you from citizen to perpetrator. From the hunted to the hunter. Despair can be a deadly weapon) என ஷோமா சவுத்ரியை மேற்கோள் காட்டி நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜு சொல்வது கவனத்துக்குரியது.
பெருகிவரும் தீவிரவாதச் சூழலில் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்குப் பின் என்னதான் வழி? விஞ்ஞானபூர்வமான புலனாய்வு என்பதுதான் ஒரே வழி. கிரிமினல் குற்றப் புலனாய்வு என்பது ஒரு அறிவியல். இன்று அது பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. தீவிரமாக முயன்றால் உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிப்பது கடினமல்ல. ஆனால் மதுரையில் என்ன நடக்கிறது? முறையான புலனாய்வு நடைபெறுவதே இல்லை. நாங்கள் விசாரித்தவர்களில் ஒருவர் சொன்னது போல பெரும்பாலான நேரங்களில் அவர்கள் செல் போனை நோண்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பதுதான் அவர்களின் வேலையாக உள்ளது. இது ஏன்?
இந்தக் கேள்விக்குப் பதில் காண்பதற்கு முதற்படியாக நாம் இதுவரை கண்டவற்றைத் தொகுத்துக் கொள்வோம்?

1. இந்த 17 குண்டுவெடிப்புகளும் பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தக் கூடியவை அல்ல. வெறும் பட்டாசு வெடிகுண்டுகள்.
2. ஐந்து ஆண்டுகள் ஆகியும் வெறும் ஐந்து வழக்குகளில்தான் குற்றப் பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
3. வழக்கு விசாரணையில் ஏகப்பட்ட குழப்பங்களும் முரண்களும் உள்ளன. ஒரு புலனாய்வு முகமை குற்றவாளியை நெருங்கும் நேரத்தில் இன்னொரு புலனாய்வு முகமை அதைத் தடுப்பதாக ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்திக் கொள்கிறார்கள்.
4. ADSP மாரிராஜன், ADSP கார்த்திகேயன், தலைமைக் காவலர்கள் மாரியப்பன், விஜய பெருமாள் ஆகியோருக்கும் நகர காவல்துறைக்கும் இடையில் முரண் உள்ளது.
5. மேற் குறிப்பிட்ட இந்த நால்வர் குழு தீவிரவாதிகள் எனக் குற்றம் சாட்டப் பட்டவர்கள் சிலருடன் நெருக்கமாக இருக்கிறார்கள். விஜய பெருமாள் எனும் தலைமைக் காவலர் அப்படி ஒருவரிடம் பணம் பெற்றுள்ளது இன்று உறுதியாகியுள்ளது.
6. இன்று வழக்கு பதியப்பட்டவர்களில் அப்பாவிகளும் உள்ளனர் என்பதை வெளிப்படையாக ஒரு அதிகாரி ஒத்துக் கொள்கிறார்.
7. வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட முஸ்லிம்களைப் பொருத்த மட்டில் அ) இமாம் அலி காலகட்ட வழக்குகளில் தண்டிக்கப்பட்டுப் பின் இப்போது குடும்ப வாழ்க்கை, தொழில் என வாழ்ந்து கொண்டிருப்போர் ஆ) ரியல் எஸ்டேட் தொடர்பான தொழில்களில் இருப்போர் இ) காவல்துறையுடன் நேரடியாக முரண்பட்டோர் ஈ)மேலே சொன்ன இவர்களுக்கு நெருக்கமாக இருக்கும் நண்பர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் ஆகியோர் தவிர உ) முற்றிலும் எந்த அரசியலிலும் தொடர்பில்லாத அப்பாவிகள் என அவர்களை அடையாளம் காண முடிகிறது.
8. முன்னதாக வழக்குகளில் சம்பந்தப்பட்டுச் சிறை சென்றவர்கள் ஆயினும் அவர்களில் பலருக்கும் இப்போது அவர்கள் மீது சுமத்தப்பட்ட வழக்குகளில் தொடர்பு இல்லை. பெரும்பாலும் அவை பொய் வழக்குகள்.
9. அல்முத்தகீம் ஃபோர்ஸ் எனும் அமைப்பைக் காரணம் காட்டி உ.முகமது அலி ஜின்னா போன்ற வழக்குரைஞர்கள் சிக்கலுக்குள்ளாக்கப்பட்ட போதிலும் அப்படி ஒரு அமைப்பு செயல்படுவதற்கான சான்றுகள் இல்லை. ஒருமுறை தமுமுக பிரமுகர் ஒருவரது லெட்டெர் பேடில் SIT தலைமைக் காவலர் மாரியப்பன் என்பவரே ‘அல்முத்தஹீம் ஃபோர்ஸ்’ குறித்து ஒரு புகார் டைப் செய்து வந்து தந்து அனுப்பச் சொன்னர் என நாங்கள் சந்தித்த முகமது அலி கூறினார்.
10. வழக்குகளில் தண்டிக்கப்பட்டு வெளி வந்து திருமணம் தொழில் என யாரும் திருந்தி வாழ காவல்துறை அனுமதிப்பதில்லை. அவர்கள் தொடர்ந்து காவல்துறையால் உளவு சொல்வதற்கும் பிற சட்ட விரோத காரியங்களுக்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
11. ரியல் எஸ்டேட் முதலான சிக்கலான தொழிலில் ஈடுபடுவோர்கள் காவல்துறையினரால் எளிதில் பயன்படுத்தக் கூடியவர்களாகவும் பழிவாங்கப்படக் கூடியவர்களாகவும் ஆகிறார்கள்.
12. SIT முதலிய சிறப்புப் படைகளைத் தக்க வைத்துப் பலன் பெறுவதற்கும், பதவி உயர்வு, பணப் பரிசுகள் முதலியவற்றைப் பெறுவதற்கும் காவல் துறையில் சிலருக்குத் தொடர்ந்து இந்த மாதிரியான குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தேவைப்படுகின்றன.
13. இந்தத் “தீவிரவாதிகள்” என முத்திரை குத்தப்படுபவர்களில் ஒருவரான முகமது அலியுடன் அண்ணன் தம்பி உறவுமுறையுடன் செல்போனில் ADSP மாரிராஜன் ‘சாட்’ செய்துள்ளதைக் கண்டோம். ஆனால் அதே அண்ணன் தம்பிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களுக்கு அழைத்து வரப்படும்போது ஏராளமான ஆயுதக் காவலர்கள் புடை சூழ அவர்களைக் கொண்டு வந்து மக்கள் மத்தியில் இவர்கள் பீதி ஊட்டுவதைக் காணலாம்.
14. வழக்கு விசாரணை தவறாகச் செய்யப்பட்டாலும் நீதிமன்றத்தில் நீதி கிடைக்குமே என கண்காணிப்பாளர் ஷைலேஷ் யாதவ் அவர்கள் சொன்ன பதில் மிகவும் பொறுப்பற்ற ஒன்று. வழக்கு என போடப்பட்டுச் சிக்க வைக்கப்பட்டால் இத்தகைய வழக்குகளில் பிணையில் வெளிவருவது எளிதல்ல. இதனால் அவர்களின் எதிர்காலமும் குடும்ப வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. அவர்களின் பிள்ளைகள் குற்றவாளிகளின் பிள்ளைகளாகக் காணப்படும் கொடுமையும் நிகழ்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சமூகமே இத்தகைய வழக்குகள் மூலம் சந்தேகத்துக்குரிய ஒரு சமூகமாகக் கட்டமைக்கப்படுகிறது.
15. இந்தக் காவல்துறை அதிகாரிகள் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டிக் கொண்டாலும், முரண்பட்டுக் கொண்டாலும் ஒரு அம்சத்தில் மிகவும் ஒற்றுமையாகச் செயல்படுகின்றனர். நெல்பேட்டை போன்ற பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய முஸ்லிம் சமூகத்தை ஒட்டுமொத்தமாக ஒரு தீவிரவாதச் சமூகமாகக் கட்டமைப்பது என்கிற அம்சம்தான் அது. காவல்துறையினர் மத்தியில் உயர்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை சமூக ஒற்றுமை மற்றும் மதச்சார்பின்மை குறித்த உணர்வூட்டும் பயிற்சித் திட்டம் (sensitization programme) ஒன்றை நிறைவேற்றுவது அவசியமாகிறது. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு தலித் பிரச்சினைகளிலும், பெண்ணுரிமை சார்ந்த பிரச்சினைகளிலும் தமிழகத்தில் இத்தகைய பயிற்சிமுகாம்கள் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டது குறிப்பிடத் தக்கது.
எமது முடிவுகளும் கோரிக்கைகளும்
1. இந்த வெடிகுண்டு வழக்குகள் 17 லும் இங்குள்ள பல்வேறு விசாரணை முகமைகளாலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பெரும்பான்மையோருக்கு இந்தக் குற்றங்களில் தொடர்பு இல்லை.

2. இமாம் அலி காலத்திலிருந்து மதுரை முஸ்லிம் தீவிரவாதத்தின் மையமாக உள்ளது என தமிழகக் காவல்துறை மக்கள் மத்தியில் ஒரு பீதியை உருவாக்கிப் பரப்பும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. போலீஸ் பக்ருதீன் போன்றவர்கள் கைது செய்யப்பட்ட பின்னும் இன்னும் அங்கு ஆபத்து உள்ளது என ஒரு புனைவை உருவாக்குவது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் இதுவரை மயில்வாகனன் – மாடசாமி டீம் இப்பகுதி இளைஞர்களைச் செய்த கடும் சித்திரவதைகள் எல்லாம் நியாயமானவைதான் என்கிற எண்ணத்தை ஏற்படுத்துவது ஆகியன இந்தப் பொய்வழக்குகளின் நோக்கங்களாக் உள்ளன. இதன் மூலம் ஒரு சமூகப் பிரிவின் மீது மக்கள் மத்தியில் வெறுப்பும் கோபமும் ஏற்படுவது பற்றியும், இது சமூக ஒற்றுமையைக் குலைப்பது பற்றியும் காவல்துறை இம்மியும் கவலைப்படுவதில்லை. ADSP மாரிராஜன், கார்த்திகேயன், மயில்வாகனன் ஆய்வாளர் மாடசாமி, காவலர்கள் விஜயபெருமாள், மாரியப்பன் போன்றோரின் சார்பு நிலை மற்றும் பொய் வழக்குகள் மூலம் மக்களுக்கு எண்ணற்ற துயரங்களை. உருவாக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றை இக்குழு கவலையோடு சுட்டிக் காட்டுகிறது.
3. காவல்துறை மற்றும் உளவுத்துறையுடன் முஸ்லிம்கள் கொண்டுள்ள வெளிப்படையான மற்றும் இரகசியமான தொடர்புகள் இறுதியில் அவர்களுக்கும் அவர்களின் சமுதாயத்திற்கும் உலை வைப்பதாகவே உள்ளது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என இக்குழு அவர்களைக் கேட்டுக் கொள்கிறது.
4. தீவிரவாதச் செயலில் ஈடுபட்டவர்கள் திருந்தி வாழ காவல்துறையினர் அனுமதிக்காத நிலை மிகவும் அநீதியானது. இதை வன்மையாக இக்குழு கண்டிக்கிறது.
5. உண்மையான குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க முடியாமல் உள்குத்து வேலைகள் நடப்பது அதிகாரபூர்வமாக கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனால் அம்பலப்பட்டுத்தப்பட்ட பின்னும் அதன் அடிப்படையில் ரிட்மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும் உடனடியாக வழக்குகளைத் திசை திருப்பிக் கொண்டு போகும் நோக்கில் காவல் துறையின் ஒரு பிரிவினராலேயே மேற்கொள்ளப்பட்ட முற்றிலும் பொய்யான ஒரு நடவடிக்கைதான் பிரான் மலை வெடிகுண்டு வழக்கு. முற்றிலும் அப்பாவியான அப்பாஸ் மைதீன், முபாரக் என்கிற இரு நபர்கள் இதில் பலியாக்கப்பட்டுள்ளனர். வழக்கைத் திசை திருப்பும் நோக்குடன் ADSP மாரி ராஜனே அவர்களின் வாக்குமூலம் என ஒன்றைத் தயாரித்து அவரை மிரட்டிக் கையொப்பம் பெற்றுள்ளார். அவரால் குறி வைக்கப்பட்ட நெல்பேட்டை இளைஞர்கள் பலரும் இன்று குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இது குறித்து ADSP மாரிராஜன் உள்ளிட்ட குழுவினர் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
6. கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் கொடுத்துள்ள இரண்டு குற்றச்சாட்டுகளையும் பதவியில் உள்ள ஒரு நீதிபதியைக் கொண்டு விசாரிக்க வேண்டும்.
7. இந்தப் 17 வழக்குகளையும் தமிழகக் காவல்துறை விசாரித்தால் நீதி கிடைக்காது என்பதால் இந்த வழக்கு விசாரணை முழுமையையும் உடனடியாக மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (CBI) மாற்ற வேண்டும். 

Source:
http://ippodhu.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%af%80%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%aa/

இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகள் ஆர்எஸ்எஸ் தொடர்பு..


இந்தியாவில் நடந்த பெரும்பாலான குண்டுவெடிப்புக்களுக்கு காரணம் ஆர்எஸ்எஸ் அமைப்பு என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கும் தேசிய ஊடகங்கள்.....

08/09/2006 மாலேகான் குண்டுவெடிப்பு 40 மரணம்.

18/02/2007 சம்ஜோதா எக்ஸ்ப்ரெஸ் குண்டுவெடிப்பு 90 மரணம் 

18/05/2007 மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு 24 மரணம்

11/10/2007 அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு 3 மரணம் 17 படுகாயம்

<<<>>>

Gujrath... Gujrath....Gujrath....!!!




குஜராத்தில் 2002 ல் நரேந்திர மோடியால் நரவேட்டையாடப்பட்ட அப்பாவிகளின் இரத்த சாட்சியங்கள். மனிதேநேயமுள்ள எவரையும் நிலைகுலைய செய்யும் காணொளி

கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்து எரித்த மோடி அரசின் இனப்படுகொலை சாட்சியாய் ஒரு பெண்

தன் மகன் தன்னுடைய கண்ணெதிரே எரிந்ததை சாட்சி பகரும் அபலைத்தாய்

14 வயதேயான பருவமடைந்த தன்னுடைய பெண்ணை மனித மிருகங்கள் கற்பழித்து கொன்றதை சாட்சி பகரும் தாய் 

மோடியின் இந்த பயங்கரவாதத்தை அங்கீகரித்து அவருக்கு நாம் பிரதமர் பதவியை அளிக்க போகிறோமா?


ஆர்.எஸ்.எஸ் தலைவர் பகவத் உத்தரவில் குண்டுவெடிப்புகள் நடத்தினோம்: சுவாமி அசீமானந்த் தகவல்


அம்பாலா: ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தற்போதைய தலைவரான மோகன் பகவத் உத்தரவைத் தொடர்ந்தே நாட்டில் பல குண்டுவெடிப்பு சம்பவங்களை நடத்தினோம் என்று சிறையில் இருக்கும் ஹிந்து தீவிரவாதி சுவாமி அசீமானந்த் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 2006ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை பல இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் டெல்லியில் இருந்து பாகிஸ்தான் சென்ற சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் தாக்குதல், மலேகான் குண்டுவெடிப்பு உள்ளிட்டவையும் அடங்கும். இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் முதன்மை குற்றவாளியாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஆதிவாசிகள் அமைப்பின் தலைவர் சுவாமி அசீமானந்த் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யின் தேசிய செயற்குழு உறுப்பினரான பிரக்யா சிங் தாகுர், மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் முன்னாள் தலைவர் சுனில் ஜோஷி உளிட்ட 31 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் சுவாமி அசீமானந்தை caravanmagazine.in என்ற இணைய தள ஊடக நிர்வாகத்தினர் 20011ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 முறை பல்வேறு சூழல்களில் அம்பாலா சிறையில் சந்தித்து பேசினர். அப்போது அசீமானந்தா தெரிவித்த தகவல்களை இந்த இணையதளம் வெளியிட்டுள்ளது. அதில் அசீமானந்த் கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதன் சுருக்கம்: மகாத்மா காந்தி படுகொலையைத் தொடர்ந்து நாதுராம் கேட்சோ, நாராயண் அப்தே ஆகியோர் 1949ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டு புதைக்கப்பட்ட சிறைதான் இந்த அம்பாலா சிறை. இந்த வழக்கில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டு 18 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்தவர் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சே. அவர் அடைக்கப்பட்டிருந்த அதே செல்லில்தான் இப்போது நான் இருக்கிறேன். அது எனக்கு பெருமையாக இருக்கிறது. ஹிந்துக்களின் நன்மை கருதியே குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினோம். இதற்காக நான் பெருமைப்படுகிறேன். என்னை யாரும் துன்புறுத்தியது இல்லை.. அனைத்து விசாரணை அதிகாரிகளிடமும் நான் ஒப்புதல் வாக்குமூலம்தான் கொடுத்திருக்கிறேன். 2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதாவது குஜராத்தின் சூரத்தில் ஆர்.எஸ்.எஸ். மாநாடு முடிவடைந்த பின்னர் அப்போது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பொதுச்செயலராக இருந்த தற்போதைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் தற்போதைய தேசிய செயற்குழு உறுப்பினர் இந்தரேஷ் குமார் ஆகியோர் குஜராத்தின் டாங்க்ஸ் பகுதியில் என்னை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது சுனில் ஜோஷியும் உடனிருந்தார். இந்தியா முழுவதும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தும் திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது மோகன் பகவத் என்னிடம், நீங்கள் சுனில் ஜோஷியுடன் இணைந்து இதை செய்யுங்கள்.. நாங்கள் நேரடியாக தலையிட முடியாது.. இப்படி குண்டு வெடிப்புகளை நிகழ்த்துவது ஒன்றும் குற்றமும் அல்ல.. இது நமது தத்துவ சிந்தனையுடன் தொடர்புடையது. ஹிந்துக்களுக்கு முகவும் முக்கியமானது. தயவு செய்து இதை நீங்கள் செய்யுங்கள்.. உங்களுக்கு எங்களது ஆதரவு எப்போதும் உண்டு என்று தெரிவித்தார். இவ்வாறு சுவாமி அசீமானந்த் கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத்தே குண்டுவெடிப்புகளுக்கு உத்தரவிட்டார் என சுவாமி அசீமானந்த் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/news/india/saffron-terror-attacks-swami-aseemanand-implicates-rss-chief-mohan-192804.html


பாட்னா குண்டு வெடிப்பு : 5 ஹிந்து இளைஞர்கள் கைது கைது !




இது தான் ஜனநாயகமா....????
~~~~~~~~~~~~~~~~~~~~~~
இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்படும்போது அவர்கள் குறித்த தகவல்களை பூதாகரமாக கிளப்பும் போலீசார் 5 ஹிந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்ட விதத்தை மென்மையாக கையாள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. என பாட்னா இணையதளம் ஒன்றின் செய்தி ஆசிரியர் இர்ஷாதுல் கூறியுள்ளார்.

பாட்னா குண்டு வெடிப்பு : 5 ஹிந்து இளைஞர்கள் கைது கைது !

1.கோபால், 2.கணேஷ், 3.பவன், 4.விசால், 5.ராஜு 'ஊமை'யாகிப் போன ஊடகங்கள் !! நரேந்திர மோடியின் ஏற்பாட்டின் பேரில், பெரும் செலவில் கூலிக்கு ஆள் அமர்த்தி 'பாட்னா'வில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது, ஹிந்துத்துவ தீவிரவாதிகள் தான் என, தற்போது தெரிய வந்துள்ளது. 

பாட்னாவிலிருந்து 150 கி.மீ. தூரத்தில் 'லக்கி சராய்' என்ற இடத்தில் வைத்து, தேசிய புலனாய்வு (NIA)அமைப்பினரால், சனிக்கிழமையன்று (09/11) கைது செய்யபபட்ட இவர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பப் பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்புடைய, கோபால் குமார் கோயல், விகாஸ் குமார், பவன் குமார், கணேஷ் குமார் ஆகியோரிடமிருந்து பல்வேறு வங்கிகளின் 'ATM' கார்டுகள், ஏராளமான வங்கி பாஸ் புத்தகங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் 20-25 வயதுடையவர்கள் என்றும், இவர்கள் 'சங்பரிவார்' தீவிரவாத அமைப்புக்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு, இது போன்ற பாதக செயல்களில் ஈடுபடுத்தப் பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. இவர்கள் அளித்த தகவலின் பேரில், இன்றைய தினம் (11/11/13) ராஜு சாவ், என்ற மற்றொரு தீவிரவாதியும் கைது செய்யப்பட்டுள்ளான். பாட்னா குண்டு வெடிப்பு நிகழ்ந்த சில மணி நேரத்துக்குள்ளாகவே கைது செய்யப்பட்ட 'ஹிந்துத்துவா' தீவிரவாதி 'பங்கஜ்' குறித்து, அரச பயங்கரவாதிகளும் ஊடக ஊதாரிகளும், வாய் திறக்க மறுக்கின்றனர்.

Source : http://samuthayaarangam.blogspot.com/2013/11/5.html & azar.tntj 

BJP, RSS behind all terror acts from Godhra to Patna

Source: http://www.indianexpress.com/news/-bjp-rss-behind-all-terror-acts-from-godhra-to-patna-/1194332/





Leader of Opposition in the state Assembly and former chief minister Shankersinh Vaghela on Tuesday alleged that the BJP and RSS were involved in all the terror incidents right from Godhra to Patna BJP rally, including communal riots in Muzaffarnagar in western UP and blasts in Bodhgaya.
Addressing mediapersons on Tuesday, he said, "There was one common strategy running from Godhra to Patna, that is to engineer killing of Hindus and Muslims for political polarisation."
"BJP is conspiring to divide society for political gains," he alleged.
"It does not bother them whether those being killed are Hindus or Muslims if it helps them grabbing power," said Vaghela, who also has roots in the RSS.
Stating that the terrorists behind serial blasts at Patna BJP rally had now been found to be Hindus, not Muslims, Vaghela said, "RSS and BJP are financing Indian Mujahideen for carrying out terror acts."
He further said, "RSS is financing members of Qadianis for terror blasts. It's a group who claim themselves to be Muslims, but according to mainstream Muslims, they don't belong to the community."
Regarding Patna blasts, he alleged, "I feel Gujarat hand behind it, because the watch recovered from the blast site had evidence of having been manufactured in Morbi and the plastic bags found from there was also manufactured at Halol. It shows that it was all planned in Gujarat."
"I also suspect the involvement of RSS and BJP hand in serial bomb blasts in July 2008 in Ahmedabad, including the blasts at Civil Hospital and LG Hospital, leading to killing of scores of people," the Congress leader added.
Asked if he could substantiate the allegations, he said, "I have been with them and I know them and their strategies." He also criticised Modi for not visiting the families of the Gujarat policemen killed on their way to his programme in UP, because it would not have yielded political dividends. But Modi flew to Bihar to visit the family members of those killed in Patna blasts as it gave him political publicity.

Terrorist

Muslims Are Not terrorist




எம் மக்கள் தீவிரவாதிகள் இல்லை இல்லை நிச்சயம் தீவிரவாதத்தை நாங்கள் ஆதரிக்கவும் இல்லை!!

எம் மக்கள் மீது விழுந்த கரையை துடைத்து எடுக்கும் வரை ஓய மாட்டோம்!! இன்ஷா அல்லாஹ்!!

தீவிரவாதம் என்பது ஒரு குறிப்பிட்ட மக்களை சார்ந்தது அல்ல என்று உண்மை இருக்க, சில ஊடகங்களோ,

எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல...
ஆனால்
எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்களே..!
- என்று கூறுகின்றனர்...

இக்னோவை யூத தீவிரவாதிகள் என்றோ,
I R A வை கத்தோலிக்க தீவிரவாதிகள் என்றோ,
மாவேயிஸ்ட்டுகளை கம்யூனிஷ தீவிரவாதிகள் என்றோ,
உல்பாவை -இந்து தீவிரவாதிகள் என்றோ,
பிரிந்தன் வாலா வை - சீக்கிய தீவிரவாதிகள் என்றோ,
L T T E ஐ - தமிழ் தீவிரவாதிகள் என்றோ,
ஓம் சின்ரிக்கோவை - புத்த தீவிரவாதிகள் என்றோ,
A T T F ஐ- கிறித்துவ தீவிரவாதிகள் என்றோ,

யாரும் அவர்கள் சார்ந்த மதம் அல்லது கொள்கைகளை முன்வைத்து அழைப்பதில்லை. ஆனால் முஸ்லிம்கள் செய்யும் செயல்களுக்கு மட்டும் இஸ்லாமிய பெயர் இணைத்து முன்மொழியப்படுவது எந்த விதத்தில் நியாயம்..?

முஸ்லிம்கள் தவறுகள் செய்தால் அது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று தான். அச்செயல் உண்மையென இருந்தால் அவர்களுக்கு தண்டனையும் கொடுக்கலாம் ஏனெனில் இஸ்லாம் இதைப்போன்ற தீவிரவாத செயல்களை ஆதாரிக்கவும் இல்லை -அங்கீகரிக்கவும் இல்லை.

ஆனால் மேற்கத்திய ஊடகங்கள் கொடுக்கும் செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டு தொப்பியையும்- தாடியையும் தீவிரவாதத்தின் அடையாளமாக்க வேண்டாம் என்பதே என் போன்றோர்களின் வேண்டுகோள்!

# இலண்டனில் நூறு வருடங்களுக்கு மேலாக தீவிரவாத தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது I R A அமைப்பு

# ஸ்பெயின் மற்றும் பிரான்ஸில் E T A தீவிரவாத அமைப்பு

# உகாண்டாவில் LORD'S சேல்வேஷன் ஆர்மி

# மற்ற அனைத்தையும் விட இலங்கையின் L T T E உலகறிந்த தீவிர வாத அமைப்பு
பஞ்சாப்பில் பிரிந்தன் வாலா - சீக்கிய தீவிரவாத அமைப்பு பொற்கோவில் சம்பவத்திற்கு பதிலடி பெயரில் பல தாக்குதலை நடத்தியுள்ளது.

# திரிபுராவில் A T T F மற்றும் N L F T போன்ற பலம் வாய்ந்த தீவிர வாத அமைப்புகள் பல தாக்குதலை நடத்தி வருகிறது.

# அஸ்ஸாமில் 1900- 2006 வரை உல்பா தீவிரவாதிகள் 749 பயங்கரவாத தாக்குதலை நடத்தியுள்ளது.


# ஆர்.எஸ்.எஸ் எனும் காவி தீவிரவாதம். இது இந்தியாவில் மட்டுமில்லது வெளிநாடுகளிலும் வேறு சில பெயர்களால் இயங்குகின்றது. மியான்மரில் சனதன் தர்ம சுயம்சேவாக் சங்கம் (எஸ்.டி.எஸ்.எஸ்), மொரிசியசில் மொரிசியஸ் சுயம்சேவாக் சங்கம் (எம்.எஸ்.எஸ்) மற்றும் சில இடங்களில் இந்து சுயம்சேவாக் சங்கம் ஆக இயங்குகின்றது. .

மாகாத்மா காந்தி ஜனவரி 30, 1948 அன்று ஒளிவு மறைவின்றி நாதுராம் கோட்சே இந்து மகா சபை என்னும ஆர் எஸ் எஸ் அமைப்பை சார்ந்தவனால் சுட்டுக்கொல்லப்பட்டது நம் எல்லோருக்கும் நினைவிருக்கும்.நமது தேச தந்தையை கொன்ற பெருமை இந்த இயக்கத்தையே சாரும். அதுவும் எப்படி பாருங்கள்.

1934 ல் இருந்து தொடர்ந்து 5 முறை அவரை கொலை செய்ய முயன்று தோற்றதின் விளைவாக 6 வது முறையாக இந்த கொடூர நிகழ்வு நடந்தேறியது. இந்த இயக்கம் மூன்று முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டது. 1948 காந்தி படுகொலை செய்யப்பட்ட பொழுது, அவசர நிலை (1975-77) அமலில் இருந்தபொழுதும் மற்றும் 1992 ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபொழுதும் தடைசெய்யப்பட்டிருந்தது.

இந்த செயல்கள் செய்தது யாரும் முஸ்லிமளே அல்ல,

Dr. ZAKIR NAYAK நன்றி Fahad Ahmed PM


Source:https://www.facebook.com/photo.php?fbid=421507631284070&set=a.338690192899148.58865.100002745098707&type=1&theater

மோடி குஜராத்தில் நிகழ்த்தியது சாதனைகளா?


 Source:https://www.facebook.com/photo.php?fbid=423872557714244&set=a.338690192899148.58865.100002745098707&type=1&theater

மோடியின் பொய்புரட்டுகளை பட்டியலிட்டார் நிதீஷ்குமார்......

இருதினங்களுக்கு முன்பு பாட்னா பொதுகூட்டத்தில் பேசிய நரேந்திரமோடி பல பொய்களையும்,வரலாற்று பிழைகளையும் உளறிகொட்டினார்.அதில் முக்கியமானவை சில.....

1)இந்திய அரசியல் இதிகாசத்தில் முக்கியபங்குவகித்தவர் சந்திரகுப்தர்.அவரை குப்தவம்சத்தை சேர்ந்தவர் என்று மோடி குறிபிட்டார்.ஆனால் சந்திரகுப்தர் மோரையா வம்சத்தை சேர்ந்தவர்.

2)உலகபுகழ்பெற்ற "தக்ஷ்ஷீலா"என்ற பல்கலைகழகம் பிகாரில் அமைந்துள்ளது பெருமைப்பட வேண்டியதாகும் என்று மோடி கூறினார்.ஆனால் "தக்ஷ்ஷீலா"அமைந்துள்ள இடம் பாகிஸ்தான்.

3)பிகாரிகளின் வீரத்தை பாராட்டிய மோடி உலகின் பல நாடுகளை கைப்பற்றிய மன்னன் சிகந்தர் இந்தியாவிற்கு படையெடுத்தபோது பிகாரிகள் கங்கைநதிக்கரையில் வைத்து அவரை மண்ணைகவ்வ செய்தனர் என்று குறிபிட்டார்.ஆனால் உண்மை என்னவெனில் சிகந்தர் பிகாருக்கு வருவதற்கு முன்பே பஞ்சாபில் போரஸ் என்பவருடன் போர்செய்து அவரை வெற்றி பெற்றார்.ஆனாலும் தோல்வியுற்ற போரசை மன்னித்து அவரை பஞ்சாபின் பொறுப்புதாரியாக நியமித்துவிட்டு நாடு திரும்பிவிட்டார்.சிகந்தர் பிகாருக்கு வரவேயில்லை.

4)நானும்,நிதீஷ்குமாரும் பிரதமர் அழைத்த விருந்தில் ஒரே டேபிளில் அமர்ந்து சாப்பிட்டோம் என்று மோடிகூரினார்.இதற்க்கு மறுப்பு தெரிவித்த நிதீஷ் மோடிஅலை என்பது எப்படி பொய்யோ அதேபோல் இதுவும் கடைந்தெடுத்த பொய்யாகும் என்று குறிப்பிட்டார்.

ஒரு பிரதமர் வேட்பாளராக தன்னை பிரபலபடுத்தி கொள்ளும் நபர் வரலாற்று மகத்துவங்களை இப்படி தவறாக பேசுவது அவரது பக்குவமின்மையை காட்டுவதாக நிதீஷ்குமார் கேளிக்கைசெய்தார்.

நமதுநாடு நான்குபுறமும் எதிரிகளால் சூழப்பட்டுள்ள நிலையில் மத அடிப்படையில் மக்களை பிரித்தாள முயற்சிக்கும் மோடி போன்றவர்கள் ஆட்சிக்கு வந்தால் அது மேலும் இந்தியாவை பலவீனப்படுத்தும் என்றும் எச்சரித்தார்.

பெங்களூர் பா ஜா க அலுவலகம் குண்டுவெடிப்பு முஸ்லிம் நிரபராதிகள் விடுதலை :





முஸ்லிம் தீவிரவாதி அன்று :

http://www.dinamalar.com/news_detail.asp?id=697526



http://www.dinamalar.com/news_detail.asp?id=838424


தீவிரவாதமும்!! இந்திய காவல் துரையின் கையாலாகாத தனமும்!! பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் கைதான பீர் முகைதீன்(மேலப்பாளையம்),சதாம் ஹுசைன் (கோவை),ஹனிபா(தென்காசி) ஆகியோரை எந்த குற்றமும் இல்லை என்பதால் பெங்களூரு நீதி மன்றம் விடுவித்துள்ளது. இவர்கள் கைது செய்யப் பட்ட பொழுது வரிந்து கட்டிக் கொண்டு செய்தி வெளியிட்ட விபச்சார ஊடகங்கள்,இவர்கள் விடுதலையான செய்தியை தற்பொழுது வரை எந்த செய்தியும் சொல்லவில்லை தி ஹிந்து பத்திரிக்கை தவிர்த்து.நாளுக்கு நாள் ஊடக விபச்சாரத்தின் உண்மை முகம் கிழிந்து கொண்டு வருகிறது.காவல் துரையின் கையாலாகாத தனமும் நாளுக்கு நாள் வெளிப்பட்டு கொண்டு தான் உள்ளன. ஒரு செம்பரி ஆடு போனால் அதை பின் தொடர்ந்து வரும் 100 கணக்கான செம்பரி ஆடுகளும் முதல் ஆட்டின் பின்னே செல்லுமாம். அது போல் நாட்டில் எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு முஸ்லிம்களை மட்டுமே சுற்றி விசாரணையை நடத்தினால் உண்மை குற்றவாளியை எப்படி கண்டுபிடிக்க முடியும் நாட்டில் எப்படி சட்ட ஒழுங்கை நிலை நிறுத்த முடியும். இது தொடருமேயானால் நாட்டு மக்களுக்கு காவல்துறை மீதுள்ள நம்பிக்கை கேள்விக் குறியாகிவிடும்.அதை உணர்ந்து காவல்துரை செயல்படவேண்டும். முக்கியமாக கருப்பு சட்டையை போர்த்திக் கொண்டு இப்பொழுது காவிக் கயவர்கல் சிலர் தேசியவாதம் பேச புறப்பட்டுள்ளனர்.ஒரு முஸ்லிம் குற்றவாளி என்று கைது செய்யப் பட்டு விட்டால் அவருக்காக யாரும் பரிந்து பேசக் கூடாதாம்.அவர்களை நாமும் தீவிரவாதி என்று தான் அழைக்க வேண்டுமாம்.இப்பொழுது அந்த போலி தேசியவாதிகள் என்ன பதில் சொல்வார்கள்?? அவர்களின் முகத்தை இப்பொழுது எதை வைத்து மறைத்து கொள்வார்கள்?? எங்கு போய் முட்டிக் கொள்வார்கள்?? இதில் நமக்கு ஒரு ஆறுதலான விஷயம் கைது செய்யப் பட்டு 6 மாதத்தில் அவர்கள் குற்றம் இல்லாதவர்கள் என்று விடுவிக்கப் பட்டது தான்.மேலும் நீதி துறையில் இன்னும் கொஞ்சம் நீதி உள்ளது என்று இது போல் சமபவங்கள் நமக்கு உறுதிபடுத்துகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த குண்டுவெடிப்பு நடந்த சில நாளில் அந்த சம்பவத்திற்கு கதை,திரைக்கதை,வசனம் எழுதி செய்தி வெளியிட்ட தினமலம் கூட்டு பத்திரிக்கைகளின் நமப்கத் தன்மை காசுக்காக படுத்து பிழைக்கும் விபசாரிகளை விட கேவலமான நிலையில் உள்ளது .(http://www.dinamalar.com/news_detail.asp?id=697526).இப்பொழுது வரை இந்த நாளிதழ்கள் தங்கள் வலைத்தளத்தில் செய்தி வெளியிடவில்லை எனபது குறிப்பிடத் தக்கது நாட்டில் தொடர்ந்து இப்படி சமபவங்கள் நடந்து கொண்டிருக்க நேத்து குக்கர் வெச்சிருந்ததா ஒருத்தரை பாட்னாவில் கைது செய்துள்ளார்கள் குண்டுவெடிப்பை சம்மந்த படுத்தி நாட்டில் காவல்துறை செயல் இப்படி இருந்தால் குற்றவாளிகளுக்கு கொண்டாட்டம் தான்.ஆர் எஸ் எஸ் டவுசர்களுக்கு குதூகலம் தான். சிறுபான்மையினர் பாதுகாப்பு கேள்விக் குறிதான் சில நாட்கள் முன்பு தமிழகத்தில் தமிழகக் காவல்துறையால் தயாரித்து நடித்து வெளியிடப் பட்ட போலிஸ் பக்ருதீன் 007 என்ற ஹால்லிவுட் டப்பிங் படம் பற்றிய உண்மை தன்மையும் விரைவில் வெளியாகும் .

மொள்ளமாரி நாய் - எல்லா நியூஸ் ளையும் வந்த பிறகு - நேவு போடாறான் பொறம்போக்கு தின மலர்

முஸ்லிம் நிரபராதி இன்று :

பேரை கூட போடவில்லை - இந்த விபச்சார பத்திரிக்கைகள்

- IQRA NETT News — with Murattu Payyan Mohammedfaizal, Senthil Nathan, Che Sathya Moorthy and 38 others.

America - Pakistan - Afganistan

https://www.facebook.com/photo.php?fbid=567533443299678&set=a.305806006139091.87851.100001290812530&type=1&theater

Jihad - Sri Lakshmi Sankarasarya


ஸ்ரீ லஷ்மி சங்கராச்சார்யா அவர்களின் - ஜிஹாத் விளக்கம்! அன்புள்ள சகோதர சகோதரிகளே! இங்கு நான் சில எண்ணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று வந்துள்ளேன். 15 வருடங்களுக்கு முன்பு குர்ஆனை படித்துள்ளேன். பத்திரிக்கையிலும், நண்பர்கள் மூலமாகவும் இஸ்லாத்தைப் பற்றியும் முகமது நபியைப் பற்றியும் பல தவறான கருத்துகள் என்க்குள் விதைக்கப்பட்டிருந்தது. இந்த மக்களும், பத்திரிக்கைகளும் குர்ஆனைப் பற்றி சொல்வது உண்மைதானா என்பதை தெரிந்து கொள்வதற்காக நான் குர்ஆனை ஆராய ஆரம்பித்தேன். கிராமத்தில் சொல்லப்படும் பழமொழி ஒன்றைப் போல் குர்ஆனில் உள்ள நல்ல விஷயங்களை படிப்பதை விட்டு விட்டு அதிலிருந்து என்ன தவறுகளை உண்டாக்கலாம் என்று சிநதிக்க ஆரம்பித்தேன். சில முஸ்லிம்களின் நடவடிக்கைகளும், குர்ஆனின் சில வசனங்களும் எதிர்மறையாக என்னை ஒரு புத்தகம் எழுதத் தூண்டியது. அதன் தலைப்பு "THE HISTORY OF ISLAMIC TERRORISM". ஆனால் நான் எழுதியவை அனைத்தும் தவறு என்று பின்னாளில் உணர்ந்து கொண்டேன். இந்து மக்களில் பெரும்பான்மையோர் இஸ்லாத்துக்கு மறு பெயர் ஜிஹாத் என்றும், ஜிஹாத் என்பது தீவிரவாதம் என்றும் புரிந்து வைத்துள்ளனர். நான் புரிந்து கொண்ட வகையில் இஸ்லாம் என்றால் என்ன என்பது பற்றியும், ஜிஹாத் என்றால் என்ன என்பது பற்றியும் தெரிந்து கொள்ள மஹா பாரத காலத்துக்கு நாம் செல்ல வேண்டும். கௌரவர்கள், பாண்டவர்கள், துரியோதனன், அர்ஜூனன் கதைகள் எல்லாம் நமக்கு நன்றாகவே தெரியும். "அர்ஜூனா, இந்த சிக்கலான நேரத்தில் இக்களங்கம் எங்கிருந்து உனக்கு வந்தது; பண்புடையவனுக்கு இது தகாதது; மேலுலகுக்கும் வழிகாட்டாதது; இகவாழ்விலோ இழிவைத் தருவது. இது போன்ற தளர்ச்சிக்கு இடம் தராதே. இது உனக்கு ஏற்றதல்ல. இதய பலவீனத்தை விட்டுவிட்டு எழுந்து நில்." பகவத் கீதை அத்தியாயம் 2 ல் வரும் வசனங்களே இவை. அநியாயத்துக்கும் அக்கிரமத்துக்கும் எதிராக நடக்கும் ஒரு யுத்தம் யுத்தம் அல்ல அது தர்ம யுத்தம் என்கிறது இந்து மத வேதங்கள். அங்கு போரிடுவதற்கோ தயவு தாட்சண்யம் பார்ப்பதற்கோ எந்த முகாந்திரமும் இல்லை என்கிறது கீதை. இந்த யுத்தத்தில் தோற்றாலும் நீ சொர்க்கம் செல்வாய் என்று உபதேசிக்கப்படுகிறது. இதே போன்றுதான் மெக்கா நகரில் அந்த மக்களின் குடி விபசாரம், சிலை வணக்கம், வட்டி, பெண் கொடுமை, பெண் குழந்தைகளை கொல்லுதல் போன்ற செயல்களை விமரிசித்து 'ஒரே இறைவனை வணங்குங்கள்' என்று உபதேசித்தார் நபிகள் நாயகம். உடனே அங்கிருந்த குரைஷிகள் இவரையும் இவரது ஆதரவாளர்களையும எதிரிகளாக பாவிக்க தொடங்கினர். பலரை கொலை செய்தனர். அவர்களின் பொருட்களை கொள்ளையடித்தனர். ஊர் விலக்கம் செய்தனர். இவர்கள் செய்த கொடுமைகளை கண்டு மனம் வெதும்பி மதினாவை நோக்கி செல்கிறார் நபிகள். அதே குரைஷி கூட்டம் அங்கும் முஸ்லிம்களை பின் தொடர்ந்து வருகிறது. முஸ்லிம்களை அழிக்கப் பார்க்கிறது. ஒரு வருடம் அல்லது இரு வருடம் அல்ல. 13 வருடங்கள் இது போன்ற கொடுமைகளை முகமது நபியும் அவரது தோழர்களும் அனுபவிக்கின்றனர். இவ்வளவு கொடுமைகள் தினம் தினம் நடந்தும் தனது தோழர்களிடம் 'பொறுமையாக இருங்கள். பொறுமையாளர்களோடு நம்மைப் படைத்த இறைவன் இருக்கிறான்' என்று அமைதியாக உபதேசித்தார். மக்கா குரைஷிகளின் அக்கிரமங்கள் உச்ச கட்டத்தை அடைந்த போதுதான் தங்களை தற்காத்து கொள்ள எதிர்த்து போரிடுகிறார்கள் முஸ்லிம்கள். மதினாவில் பயந்து தஞ்சம் அடைந்த முஸ்லிம்களை கொல்வதற்காக படை திரட்டிக் கொண்டு மக்காவிலிருந்து மதினா நோக்கி குரைஷிகளின் படை வருகிறது. பகவத் கீதையில் எந்த சூழலை நாம் பார்ததோமோ அதே சூழல்தான் இங்கு முஸ்லிம்களுக்கும் உள்ளது. இதுதான் இஸ்லாத்தில் ஜிஹாதாக பார்க்கப்படுகிறது. இதற்கு தீவிரவாதம் என்று பெயரிடுவீர்களா? தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ள ஒருவன் எடுக்கும் தற்காப்பு முயற்சிக்கு தீவிரவாதம் என்ற சொல் சரியாகுமா? பகவத் கீதையில் வரும் சம்பவங்களை நியாயப்படுத்தும் பலர் இஸ்லாமியர்களின் தற்காப்பு போர்களை விமரிசிப்பது ஏன்? நமது நாட்டில் தங்களை வளர்த்துக் கொள்ள சிலர் இந்துக்களையும் முஸ்லிம்களையும் நிரந்தரமாக பிரித்து வைக்க முயற்சிக்கின்றனர். இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்லி தங்களை வளமாக்கி கொள்கின்றனர். ஜிஹாதுக்கு தவறான விளக்கத்தை கொடுத்து இந்துக்களை பிரிக்க பார்க்கின்றனர். . .

நாடாளுமன்றத் தாக்குதல், 26/11 மும்பைத் தாக்குதல் பின்னணியில் அரசா? - அதிர்ச்சித் தகவல்!

நாடாளுமன்றத் தாக்குதல், 26/11 மும்பைத் தாக்குதல் பின்னணியில் அரசா? - அதிர்ச்சித் தகவல்!

புது டெல்லி : இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் தொடர்பாக சிபிஐ மற்றும் ஐபி-க்கு இடையே நடைபெறும் மோதலில் புதிய திருப்பமாக நாடாளுமன்ற தாக்குதல் மற்றும் மும்பை 26/11 தாக்குதல் ஆகியவற்றை இந்திய அரசே நடத்தியது என்று சிபிஐ அதிகாரி தெரிவித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் அரசின் வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த உள்துறை அமைச்சகத்தின் செயலர் மணி, இந்திய நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் மும்பையில் நடத்தப்பட்ட 26/11 தாக்குதலும் இந்திய அரசாலேயே திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்று இஷ்ரத் ஜஹான் வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சிறப்பு புலனாய்வு அதிகாரி சதீஷ் வர்மா கூறியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான சட்டங்களை எதிர்ப்பின்றி கொண்டு வரவே மத்திய அரசு இத்தகைய தாக்குதல்களை நிறைவேற்றியதாக சதீஷ் வர்மா கூறியதாக மணி கூறியுள்ளார். நாடாளுமன்ற தாக்குதல் நடைபெற்ற (13.12.2001)ஒரு சில தினங்களிலேயே பொடா சட்டமும் மும்பை தாக்குதல் (26.11.2008) நடைபெற்ற உடன் சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டமும் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இஷ்ரத் ஜஹானுடன் கொல்லப்பட்ட மூவரும் லஷ்கர் தீவிரவாதிகள் எனும் ஐபி-யின் அறிக்கை பொய்யானது என்று சதீஷ் சர்மா கருதியதாகவும் மணி கூறினார். இஷ்ரத் ஜஹான் என்கவுண்டர் தொடர்பாக உள்துறை தயாரித்த அறிக்கையானது சர்ச்சைக்குரிய ஐபி அதிகாரி ராஜேந்தர் குமார் என்பவரால் தயாரிக்கப்பட்டது என்று சர்மா கருதியதாகவும் மணி தன் உயர் அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கு தொடர்பாக ஐபி அதிகாரி ராஜேந்தர் குமாருக்கு எதிராக சிபிஐ வழக்கு தொடர முடிவானதும், உள்துறை அமைச்சகத்தின் தலையீட்டால் அம்முயற்சி நிறுத்தப்பட்டது கவனிக்கத்தக்கது. குஜராத் மாநிலத்தைச் சார்ந்த ஐபிஎஸ் கேடர் அதிகாரியான சதீஷ் வர்மா சிபிஐ சிறப்பு புலனாய்வு குழுவிலிருந்து நீக்கப்பட்டு ஜுனுகாத் காவலர் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராக தற்போது இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது....!


Thanks to:http://adiraimuslims.blogspot.in/2013/07/2611.html

Godhra Riots


உண்மையை வெளிக்கொண்டுவந்த புத்தகம் வாங்கிப்படியுங்கள் !!
கோத்ரா சூத்ரதாரி மோடி !!!இது திட்டமிட்ட இனபடுகொலை !!



"குஜராத் திட்டமிட்ட இனப்படுகொலை!!

சதிகார, கொலைகாரக் காவிகள் கொக்கரிக்கிறார்கள்....

இந்திய ஜனநாயகத்தின் ஞாபமறதிப் பதிவேட்டில் ஏற்றப்பட்டு விட்ட குஜராத் இனப்படுகொலையை, கொலையாளிகளின் இரத்தக் கவிச்சு வீசும் வாக்கு மூலங்கள் வழியாகவே நம் நினைவுக்கு கொண்டு வந்திருக்கிறது தெஹல்கா வார இதழ். குஜராத் படுகொலை குறித்து இதுவரை நாம் அறிந்திராத இரகசியம் எதையும் தெஹல்கா வெளிக் கொண்டு வந்துவிடவில்லை. ஆனால் இது காறும் நாம் பொதுவாக அறிந்திருந்தவை பற்றிக் குறிப்பாகவும், ஆதாரபூர்வமாகவும், குற்றவாளிகளின் வாக்கு மூலமாகவும் ஆவணப்படுத்தியிருக்கிறது. அவ்வகையில் இதுவரை நாம் அறிந்த புலனாய்வு இதழியங்களின் மத்தியில் இந்தப் பணி தனித்துவமிக்கதாய் இருக்கிறது.

மதவெறியை முறியடிக்கும் ஒரே நோக்கத்துக்காகத் தான் வேறு வழியின்றி காங்கிரஸ் அரசை ஆதரிப்பதாகக் கூறிக்கொள்ளும் வலது, இடது கம்யூனிஸ்டு கட்சிகளோ சம்பிரதாய கண்டனத்துக்கு மேல் எதுவும் செய்யவில்லை. பா.ஜ.க.வின் முன்னாள் கூட்டாளிகளான தி.மு.க, பா.மா.க, ம.தி.மு.க கட்சிகளோ அப்படியொரு சம்பிரதாயக் கண்டனத்தைக் கூடத் தெரிவிக்கவில்லை.

தெஹல்கா, நவம்பர் 3, 2007 இதழில் வெளிவந்துள்ள இந்தப் பேட்டிகளும் கட்டுரைகளும் இந்தக் கணம் வரை ஊடங்களால் திட்டமிட்ட இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கின்றன என்பதால், தமிழக மக்களின் பலருக்கு இந்த உண்மைகள் போய் சேரவில்லை. பார்ப்பனியத்துக்கு எதிரான போராட்டத்தில் சிறந்ததொரு மரபைக் கொண்டிருக்கும் தமிழகத்தின் மக்கள் மத்தியில் இவற்றைக் கொண்டு செல்வதன் மூலம் பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடியும் என்பதால் இவற்றை மொழியாக்கம் செய்து வெளியீடுகிறோம்.

அநீதிகளுக்கு அஞ்சுவது, பணிவது, சகித்துகொள்வது, இறுதியில் அதனுடன் வாழப்பழகிக் கொள்வது என்ற அடிமைப் புத்தி நமது சமூகத்தில் தோற்றுவித்திருக்கும் மவுனத்தைக் கலைக்க விரும்பியே இந்த மொழிபெயர்ப்பைக் கொண்டுவருகிறோம். எனவே, இந்த வெளீயிடு உங்கள் மீது தோற்றுவிக்கும் தாக்கம் அபோதைக்கு எழுந்து அடங்கும் கோபமாகக் கரைந்து விடக் கூடாது. அது பார்ப்பன பாசிசத்தை எதிர்க்கும் செயல்பூர்வமான எதிர்வினை ஆகவேண்டும், ஆகும் என்று நம்புகிறோம்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் அடுத்து ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து மதவெறியர்கள் அரங்கேற்றிய முஸ்லீம் மக்கள் மீதான படுகொலைகளை இன்று தெகல்கா இதழ் வீடியோ காட்சிகளாகவே ஆதாரபூர்வமாகவே அம்பலப்படுத்தி உள்ளது. ஆனால் உச்சநீதிமன்றமும், ஓட்டுப்பொறுக்கிகளும் அதுபற்றி வாய்திறக்க மறுக்கின்றனர். காரணம் வேதாந்தி மன்றமாகவும், அந்த காலிகளுடன் பொறுக்கி தின்ற கட்சிகளாகவும் இவர்கள் இருப்பதால் தான்.
..
படுகொலைகளை போலவே அதற்கு காரணமானதாக இவர்கள் கூறும் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமே எப்படி திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ் காலிகளால் நடத்தப்பட்டது என்று இந்த நூல் நிரூப்பிக்கின்றது.

'தேசத் தந்தை காந்தி பிறந்த மண்ணில' என நுலில் கேட்டு இந்து மதவெறியின் மிதவாத முகமான துரோகி காந்தியினை ஆதரித்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஆனால் காந்தி பிறந்த மண்ணில் தான் இந்து பயங்கரவாதத்தினை அரங்கேற்ற முடியும். இவ்வாறு தீ பற்றுவதற்கு சறுகுகள் காய்ந்து இருப்பதற்கு ஏற்பாடு செந்தவரே காந்தி தான் என்பது யதார்த்தம்.

இன்று இந்து மதவெறியினை போலிகளும், காங்கிரஸ் துரோகிகளும் இந்து மதவெறியின் மிதவாத முகமான காந்தி, பாரதி, விவேகானந்தர் போன்ற ஆட்களை ஏற்றுக்கொண்டு, அதனுடன் கூடிக்குலாவி கொண்டே எதிர்ப்பதாக நாடகமாடுகிறார்கள்.இருப்பினும் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் குறித்து மறைக்கப்பட்ட உண்மைகளை அறியும் விதத்தில் இந்நூலினை படிக்கலாம்

"T M M K" AL-KHOBAR. K.S.A