ஸ்பெக்ட்ரம் ஊழல்...

டிமை இந்தியாவில் 1881 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தொலைபேசி, சுதந்திர இந்தியாவில் அரசின் கையிலும் கட்டுப்பாட்டிலும்  இருந்தது. இந்தியா சுதந்திரமடைந்த 1947  காலகட்டத்தில் ஐயாயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே தொலைபேசி இணைப்பு  இருந்தது.  பெரிய வணிகர்களும் தொழிலதிபர்களும்  முதலாளிகளும்  பணக்காரர்களும் மட்டுமே தொலைபேசி இணைப்புப் பெற முடியும். தொலைபேசி இணைப்புக் கிடைப்பதற்காக  முன்பணம் கட்டி மாதக்கணக்கில் காத்திருந்து தொலைபேசி இணைப்பைப் பெற வேண்டிய நிலை. பக்கத்து ஊருக்கு   ஓர் அவசரச் செய்தியைத் தெரிவிப்பதற்குக் கூட ட்ரங்க் கால் பதிவு செய்து மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. 

அறுபதுகளில் இந்தியாவில்   எஸ்.டி.டி அறிமுகப்படுத்தப்பட்ட பின் ட்ரங்க் கால் புக் செய்து காத்திருக்கும்  நிலையில் மாற்றம் வந்தது. வாடிக்கை யாளர்கள் நேரடியாக டயல் செய்து பேசும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் சாதாரண பொதுமக்கள் தொலைபேசி இணைப்புக் கிடைப்பதற்குப் பல ஆண்டுக் காலம் காத்திருக்க வேண்டிய நிலையே நீடித்தது.  இணைப்புக் கிடைத்தாலும் தொலைபேசிகள் சரியாக வேலை செய்யா. 1980 ஆம் ஆண்டில் அன்றைய தொலைதொடர்புத் துறை  அமைச்சரான சி.எம். ஸ்டீஃபனை நோக்கி இது குறித்து வினா எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான சுதந்தராக்கட்சித் தலைவர் பிலூ மோடி "எஸ் டி டி என்பது Steephan's Telephonic Disaster" எனக் கிண்டல் செய்த நிகழ்ச்சியும் நடந்தது.  "தொலைபேசி என்பது ஆடம்பரப்பொருள்;  இன்றியமையாத ஒன்று எனக்கோரும் உரிமை யாருக்கும் இல்லை. தொலைபேசிச் சேவையில் அதிருப்தி உள்ளவர்கள் தங்கள் தொலைபேசிக் கருவிகளை அரசிடம் ஒப்படைத்து விடலாம்.தொலைபேசிக்காகப் பதிவு செய்து விட்டு எட்டு ஆண்டுகளுக்கும் மேல் காத்திருப்பவர்களுக்கு அவற்றைக் கொடுப்போம்" என்று அமைச்சர் ஸ்டீபன் அவையில் அறிவித்ததும் நிகழ்ந்தது. 
இப்படி எட்டாக்கனியாக  இருந்த தொலைபேசியை மக்களுக்குப் பரவலாக்கியவர் இந்தியாவின் பிரதமராக இருந்த மறைந்த ராஜீவ்காந்திதான். 1987 ஆம் ஆண்டில் அவரது தொழிநுட்ப ஆலோசகர் ஸாம்பிட்ராடோ மூலம் தொலைதொடர்பில் பெரும் புரட்சியை ஏற்படுத்தினார் ராஜீவ்காந்தி.  நாடெங்கும் பி.சி.ஒ எனப்படும் பொதுத்தொலைபேசி அழைப்பகங்கள் உருவாக்கப்பட்டன. வெளிநாட்டுத் தொடர்புகூட நேரடி அழைப்பின் மூலம் எளிதாக்கப்பட்டது. சுக்ராம்  காலத்தில் தாராளமயமாக்கல் கொள்கையால் நாடெங்கும் இணைப்புகள் காத்திருப்பின்றி வழங்கப்பட்டன.  தயாநிதிமாறன் காலத்தில் இன்னும் எளிமையாக்கப்பட்டது. ஆகஸ்ட் 2010 ஆம் ஆண்டிற்குள் வீட்டு இணைப்பும் மொபைல் இணைப்புமாக  706.37  மில்லியன் வாடிக்கையாளர்களும்   670.60 மில்லியன் மொபைல் இணைப்புகளுமாக மிளிர்கிறது இந்தியாவின் தொலைதொடர்பு வளர்ச்சி. ஒரு தனியார் மொபைல் இணைப்பு நிறுவனம் மட்டும் 200 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டு இயங்குவது,  தொலைதொடர்புத் துறையில் தனியாரின் மிதமிஞ்சிய வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக் காட்டு  ஆகும்.. 

வளம் கொழிக்கும் துறையாக இன்று மாறி இருக்கும் தொலைதொடர்புத் துறையில் ஆண்டிமுத்து ராசாவுக்கு முன்னர் அமைச்சர்களாக இருந்தவர்களும் ஊழல் குற்றசாட்டிலிருந்து  தப்பவில்லை. 

1991-1996 காலகட்டத்தில்  சுக்ராம்  தொலைதொடர்பு அமைச்சராக இருந்தபோது மொபைல்ஃபோன் புரட்சிக்கு வித்திட்டார். எனினும் அவர் தம் துறையில் 1500 கோடி ரூபாய் ஊழல் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். மேலும் 20,000 கோடி ரூபாய் மதிப்புள்ள தொலைதொடர்புக் கருவிகள் வாங்கும் ஒப்பந்தம் வழங்குவதற்குப் பணம் பெற்றார் எனும் குற்றச்சாட்டுக்கும் ஆளானார். வருமானத்துக்கு அதிகமாக நாலேகால் கோடி ரூபாய் அளவுக்குச்  சொத்துச் சேர்த்திருந்த குற்றத்திற்காக மூன்றாண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டார்.

1998-99 காலத்தில் பி.ஜே.பியைச் சேர்ந்த ஜக்மோகன் அமைச்சராக இருந்தபோது   தொலைதொடர்புத் துறைக்கு மாதம் ஒன்றுக்கு 41.57 கோடி ரூபாய் (92 மில்லியன் டாலர்) இழப்பு எற்பட்டது. இதனால் அவரை அத்துறையில் இருந்து மாற்றிவிட்டுத் தாமே அத்துறையின் பொறுப்பைக் கூடுதலாக ஏற்றார் அன்றைய பிரதமர் வாஜ்பாய். 

இத்துறையில் தமக்கு உதவியாக ராம்விலாஸ்பாஸ்வானை ராஜாங்க அமைச்சராக நியமித்தார் வாஜ்பாய். . 1999 முதல் 2001 வரை பொறுப்பில் இருந்த பாஸ்வான்  மீதும் Global System for Mobile Communications (GSM) மற்றும் Code Division Multiple Access (CDMA) உரிமங்கள் வழங்கியது தொடர்பாக ரூபாய் 1300 கோடி ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து  ராம்விலாஸ் பாஸ்வான் நீக்கப்பட்டு அவ்விடத்திற்கு ப்ரமோத்மகாஜன்  நியமிக்கப்பட்டார். 

2001 முதல் 2003 வரை ப்ரமோத்மகாஜன் அமைச்சராக இருந்த  காலத்தில் தனியார் மொபைல் நிறுவனங்களிடமிருந்து அரசுக்கு வரவேண்டிய  கட்டணங்களை விட்டுக் கொடுத்ததால் கோடிக் கணக்கில்  அரசுக்கு இழப்பு ஏற்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனத்துக்குச் சட்ட விதிகளுக்கு முரணாகச் சலுகைகள் வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்ட மகாஜன்  அதற்கென ஆயிரம் கோடிகளில் பலன்பெற்றார் என்றும் கூறப்பட்டது. 

ப்ரமோத் மகாஜனை நீக்கிவிட்டு அவ்விடத்தில் அமர்த்தப்பட்ட அருண்ஷோரி மீதும்  குற்றச்சாட்டு உண்டு. 2003 முதல் 2005 வரை தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்த அருண்ஷோரி, ராசா மீதான பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவையற்றது எனக்  கூறி வருவது குறிப்பிடத் தக்கது.  

பி.ஜே.பி ஆட்சி முடிவுக்கு வந்த பின் பதவி ஏற்ற காங்கிரஸ் கூட்டணி அரசில் பணம் கொழிக்கும் தகவல் தொடர்புத் துறையைப் போராடிப் பெற்று, முதன் முறையாக அரசியலிலும்  நாடாளுமன்றத்திலும் அடியெடுத்து வைத்த -- எந்த அரசியல் அனுபவமும் இல்லாத தம் பேரன் தயாநிதி  மாறனை அத்துறையின் அமைச்சராக்கி அழகு பார்த்தார் கருணாநிதி . மதுரை தினகரன் நாளிதழ் நடத்திய கருத்துக்கணிப்பின் எதிர்விளைவாக அந்நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்டு, விலைமதிக்க வொண்ணா மூன்று  உயிர்கள் பறிக்கப்பட்டபோது  எழுந்த குடும்ப கலகத்தில், பேரன் தயாநிதியை நீக்கி விட்டு அந்த இடத்தில் தம்  நம்பிக்கைக்கு உரியவரான ராசாவை நியமித்தார் கருணாநிதி. அன்று முதல் கடந்த வாரம் வரை ராசாவே தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்தார். 

ஒரு கோடி ... இல்லை பத்துக் கோடி...  இல்லையில்லை ... நூறுகோடி..? எத்தனை பூஜ்யங்கள் இட்டால் ஒரு கோடி என்பதை எண்ணால் எழுத முடியும் என்று கூடத் தெரியாத பாமர  மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு நாட்டில்  1.76 இலட்சம் கோடி ரூபாய்  என்பதைக் கற்பனைகூடச் செய்ய  முடியவில்லை. இந்தியாவின் தொலைதொடர்புத்துறை  அமைச்சராக இருந்த ஆண்டிமுத்து ராசாவால் இந்திய அரசுக்கு / இந்திய மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள  துரோகம் இது. 

தொலைதொடர்பில் மிகவும் மதிப்பு மிக்கது  2nd Generation electro-magnetic spectrum -- இரண்டாம் தலைமுறை  மின்காந்த அலைக்கற்றை--!  பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிவுரையையும் பொருட்படுத்தாமல்,  தொலை தொடர்பு ஒழுங்குமுறை  ஆணையம் தெரிவித்த எதிர்ப்புகளையும் மீறி, எதிர்ப்புத் தெரிவித்த தம் துறை அதிகாரிகளை மாற்றி,  யாருடைய   லாபத்துக்காகவோ தம்மிச்சையாகச் செயல்பட்டு, குறிப்பிட்ட  ஒரு நாளில், ஒரு மணி நேரத்துக்குள், "முந்துவோருக்கு முதல் சேவை" (First come first service) என்ற அடிப்படையில் ராசா வழங்கிய ஸ்பெக்ட்ரம் உரிமத்தால் -- உரிமங்கள் சினிமா டிக்கட்டுகள்போல் விற்கப்பட்டன என டில்லி உயர்நீதிமன்றம் விமர்சித்திருந்தது -- நாட்டுக்கும் மக்களுக்கும்    பேரிழப்பை ஏற்படுத்திவிட்டார் ஆண்டிமுத்து ராசா.  ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி  ஆராசா தம் முறைகேட்டால் சுமார் 1,76,379 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வர வேண்டிய வருமானத்தைத் தனியாருக்குத் தாரைவார்த்துவிட்டார்.

2008-2009 ஆண்டில் மத்திய அரசின் பட்ஜெட்டின் பற்றாக்குறையில் நான்கில் மூன்று பங்கை இத்தொகையால் நிரப்பியிருக்க முடியும். அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்துக்காக இதை வைத்து அரசியல் செய்தாலும் நாட்டு நலனில் அக்கறையுள்ள பொதுமக்கள் அனைவரையும் ஆத்திரமுறச் செய்த செயல் இது

இதைப்பற்றி விளக்கமாகவும் விரிவாகவும் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டு விட்ட நிலையில்  இவ்விவகாரத்தில் சில வினாக்களுக்கு விடை தெரியாமலே உள்ளன.  

யாரேனும் விடை கூறுவரா? 

இவ்வினாக்களுக்கெல்லாம் ஒரே விடை வேறொருவருக்காக வேறொரு சமயத்தில் ஜெயலலிதா  சொன்னதுதான். 

ஆம்!  
Selective amnesia.

No comments:

Post a Comment