ஒற்றையடிப்பாதை



(பீ. எம். கமால், கடையநல்லூர்)
 
கலிமா-
சுவனத்தின் நெற்றியில்
ஆண்டவன் எழுதிய
ஆதி வாசகம் !
 
புள்ளிகளே இல்லாத
இந்தப்
புனித வாசகம்தான்
ஏகத்துவ மாளிகையை
எல்லோரும் திறக்கின்ற
அதிசயச்  சாவி !
 
கலிமா-
பலதெய்வப் பாஷாணத்
தூசியைத்  துடைத்தெறியும்
ஒட்டடைக்கோல் !
 
கலிமாவின்
உட்பொருளைக் கண்டு
உணர்ந்து கொண்டவரையே
ஞானிகள் என்று
நானிலம் போற்றும் !
 
கலிமா-
ஆன்மா சுவனத்தை
அடைய நடக்கின்ற
ஒற்றையடிப்பாதை !
 
கலிமா-
நாத்திகத்தில் தொடங்கி
ஆத்திகத்தில் முடிகிறது !
ஏனம் கழுவிப்
பானம் ஊற்றுவதற்காக !
 
மனிதக்
 கடிதங்களில்
இந்த
முத்திரை
குத்தப்படவில்லைஎன்றால் 
ஆண்டவனைச் சென்று
அடையவே முடியாது !
இந்த 
ஒளி விளக்கை
ஏந்திக் கொண்டுதான் 
இருண்டு கிடக்கும்
ஆன்மக்காட்டில்
ஞானிகளின்
ஒப்பற்ற பயணம்
உள்நோக்கித் தொடர்கிறது !
 
கலிமாவின்
முன்னிரண்டு வார்த்தைகளை
மொழிந்து விட்டால் மட்டுமே
"தௌஹீது" அங்கே
தரிபட்டு விடாது !
பின்னிரண்டு வார்த்தைகளும்
பேசப்பட்டால்தான்
ஏக இறைக் கொள்கை
ஏற்றுக் கொள்ளப்படும் !
 
கலிமா-
சுவனத்தில்  வேர்விட்டு
இதயத்தில் கிளை பரப்பும்
அதிசய மரம் !
 
இந்த மரத்தின்
இனிய நிழலில்தான்
ஞானிகளின் தவத்திற்கு
வரமளிக்கப்  படுகிறது !
 
கலிமா-
ஒரு அதிசய ஆடை !
இதை
உடுத்திக் கொண்டால்தான்
ஆன்மா
நிர்வாணம் அடையும் !
 
முன்னோக்கி ஓடினால்
பந்தயத்தில் அடையலாம்
வெற்றி !
ஆனால்
கலிமாவைப்  பற்றி
 "நின்றால்" தான்
வெற்றி கிடைக்கும் !
 
ஈமான் முழுமை பெற்ற
சீமானாய் ஆவதற்கு
கலிமாவில்  தான் மனதைக்
கட்டாயம் முதலீடு
செய்ய வேண்டும் !
அப்போதுதான்-
சுவனத்தை இலாபமாய்
சுலபமாய்ப் பெறமுடியும் !
 

No comments:

Post a Comment