மாநபி வழியை பேணு


கருப்பு நீக்ரோ பிலாலை
கருத்தோடு முதலில் பாங்கைப்
பொருத்தமாய் முழங்க வைத்து
வருத்தும் நிறவேறி நீக்கிய நெறிமுறை.
தனிமனித பெருமையும் உரிமையும்
இனியும் இல்லை என்று
முன்னால் வருபவரே முதலில்
முன் நின்று தொழும் சமத்துவம்.
அரும்பொருள் உடையார் கணக்கிட்டு
தரும்பொருளைத் தக்கார்க்குக்
தகவழங்கி
இல்லாமை இருளகற்றி எல்லாரும்
எல்லாமும் பெறசெய்யும் ஜகாத்.
உறுபசி உணர்ந்து நலிந்தவர்
பெறுதுயர் துய்த்து பாரில்
பசிபோக்க பக்குவப் படுத்தும்
உசிதமான உன்னத நோன்பு.
பகரும் மொழிபேத மின்றி
பகட்டில்லா இஹ்ராம் உடையில்
பன் னாட்டு மக்களும் இணைந்து
நன் னயம் காணும் சகோதரத்துவம்.
குப்பையைத் தினமும் கொடுரமாய்த்
தப்பாது கொட்டி கொக்கரித்து
நகைத்த பெண்நலமுற உதவிய
பகைவருக் கருளும் பாங்கு.
தேரிடா குறைஷிகள் சீறி வந்து
போரிட்ட பத்ரு களத்தில்
நீரின்ரி தவித்த எதிரிக்கு
நீரளித்த சீரான மேன்மை.
பெண்ணுக்கும் கல்வியைக் கற்பித்து
கண்ணான சொத்திலும் பங்கு தந்து
விதவை மறுமணம் நடத்தி
உதவி காட்டிய மறுமலர்ச்சி.
தனித்துவம் தவிர்த்து சேர்ந்துண்ண
மனிதர்களைச் சேர்த்து வைத்து
இனப்பிரிவை இல்லாமல் ஆக்கியது
இனிய நபி இயம்பிய வழியே.
மனித நேயம் காண
மாநபி வழியை பேணு
மு.அ. அபுல் அமீன் நாகூர்.
ஓய்வு பெற்ற அஞ்சலக அதிகாரி, செல்பேசி :-9943469691
தலைவர்:- P.T.A; G.P.S; Nagore. V.E.C: Nagapattinam.
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியம் பெறுவோர் சங்கம். நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

No comments:

Post a Comment